பதிவு செய்த நாள்
12
செப்
2019
04:09
திருக்கனுார்: செட்டிப்பட்டு வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று 11ல் நடந்தது. திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் புனரமைக்கப்பட்டது.
இதனையொட்டி, கும்பாபிஷேக விழா 9ம் தேதி மாலை யஜமான சங்கல்பம், விஷ்வசேன ஆராதனம், ஆசார்ய வர்ணம், பாலிகை ஸ்தாபனம், வாஸ்துஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் (செப்., 10ல்) காலை ரக்ஷாபந்தனம், த்வார தோரணம, கும்ப, பிம்ப, மண்டல பூஜை, புதிய பிம்பங்கள், விமான கலசம் கரிகோல ஊர்வலம் நடந்தது.
தொடர்ந்து மகா கலச விசேஷ திருமஞ்சனம், தத்வ ஹோமம், சயனாதிவாசம் நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று 11ம் தேதி காலை 5:45 மணிக்கு கோ பூஜை, விஸ்வருபம், ஹோமம், மகா பூர்ணாஹூதி, யாத்ராதானத்தை தொடர்ந்து கடம் புறப்பாடாக காலை 10:10 மணிக்கு வங்கீபுரம் ஒப்பிலியப்பன் சன்னதி வித்யாபூஷண வைஷ்ணவ சிம்மம் கோபால தேசிகாசார்ய மகா தேசிய நம் சுவாமிகள் முன்னிலையில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில், செட்டிப்பட்டு மற்றும் சுற்று வட்டார மக்கள் தரிசனம் செய்தனர். மாலை சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடந்தது.