வழிபாட்டு முறையில் மந்திரம், தந்திரம், யந்திரம் என மூன்றைச் சொல்வர். பக்தியில் ஈடுபடுபவரை உயர்நிலைக்கு அழைத்து செல்வது மந்திரம். ஒவ்வொரு தெய்வத்திற்குரிய மந்திரங்களை ஜபிப்பதால் அதன் ஒலி அலைகளால் மனம் ஒருமுகப்படும். ஜபிப்பவரை தெய்வ அருள் கவசம் போல பாதுகாக்கும். தெய்வங்களுக்குரிய பூஜை முறைகளுக்கு தந்திரம் என்று பெயர். உதாரணமாக முருகனுக்குரிய பூஜை முறைகளைக் கூறுவது குமார தந்திரம். தெய்வத்துக்கு உரிய ஸ்ரீசக்கரங்கள் தத்துவ அடிப்படையில் சதுரம், வட்டம், முக்கோணம், தாமரை ஆகிய வடிவங்களால் அமைக்கப்படும், இவையே யந்திரம் எனப்படும். யந்திரத்தில் தெய்வத்தின் அருட்சக்தி பரவி இருக்கும்.