ஒரு ராஜா வியாபாரிகளுக்கு கடன் கொடுத்து உதவினார். ஒருநாள் கடன் வாங்கியோர் பட்டியல்படி கடனாளிகள் அனைவரும் வரவழைக்கப் பட்டனர். அவரவருக்கு உரிமையுள்ள சொத்துக்களை விற்று கடனைச் செலுத்த ஆணையிட்டார் ராஜா. அதிக கடன் வாங்கிய வியாபாரி ஒருவர், தொழில் நஷ்டத்தை சொல்லி தள்ளுபடி செய்யும்படி மன்றாடினார். இரக்கப்பட்ட ராஜாவும் சம்மதித்தார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த வியாபாரி தன்னிடம் சொற்ப தொகை கடன்பட்டிருந்த வேலைக்காரன் ஒருவனை கூப்பிட்டார். ”இப்போதே உன் கடனைத் தீர்க்க வேண்டும் இல்லாவிட்டால் நான் தண்டிப்பேன்”என நிர்ப்பந்தம் செய்தான். காலில் விழுந்த வேலைக்காரன் செய்வதறியாமல் திகைத்தான். இந்த விஷயம் ராஜாவின் காதிற்கு வந்தது. வியாபாரியை மீண்டும் கூப்பிட்ட ராஜா, ’என்னைப் போல நீயும் இரக்கம் காட்ட வேண்டாமா?’ என்று சொல்லி தண்டனை அளித்தார். கடனை வசூலிக்கவும் முடிவு செய்தார்.