பதிவு செய்த நாள்
04
அக்
2019
01:10
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதிகளில், நவராத்திரி விழாவையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகளுடன் கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கின்றன.
பொள்ளாச்சி ஐயப்பன் கோவிலில், மஞ்சள் அம்மன் தினமும் ஒரு அலங்காரத்தில் பக்தர் களுக்கு அருள்பாலிக்கிறார். துர்கா கணபதி, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் அருள்பாலித்த மஞ்சள் அம்மன் நேற்றுமுன்தினம், மீனாட்சி அம்மனாக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், அம்மன் தினமும் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்.கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. வாசவி மஹாலில் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பொள்ளாச்சி நவரச நாட்டியாலயா ஆசிரியர் கீதா பிரகாஷ் மாணவியர், மயில், அம்மா கவித்துவம், பிட்டுக்கு மண் சுமந்தது என, 22 வகையான பாடல்களுக்கு, பரத நாட்டியம் ஆடி அசத்தினர்.
* ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கொலு அமைக்கப்பட்டு உள்ளது. கொலு அருகே மாசாணியம்மனின் உற்சவர் சிலை வைக்கப்பட்டு உள்ளது.கோவில் வளாகத்திலுள்ள பேச்சியம்மனுக்கு தினமும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படுகிறது. மாசாணியம்மனின் உற்சவர் சிலைக்கு சிறப்பு பூஜைகளும், இரவு நேரங்களில், பஜனை பாடல் நிகழ்ச்சியும் நடக்கிறது.கோவிலுக்கு வரும் குட்டீஸ் முதல் பெரியவர்கள் வரையில், அனைவரும் கொலு, பஜனையில் பங்கேற்று, அம்மனை வழிபடுகின்றனர்.