ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பக்தர்கள் கோயிலில் குவிந்திருந்த நிலையில் அதிகாலை 12:45 மணிக்கு நடைதிறக்கப்பட்டு பெருமாளுக்கு சுப்ரபாதபூஜை, சிறப்பு திருமஞ்சன அபிஷேகங்கள் மற்றும் அலங்கார பூஜைகளை மாப்பிள்ளை பட்டர், அனந்து பட்டர் செய்தனர். இதையடுத்து அதிகாலை 1:50 மணி முதல் ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை கோவிந்தா, கோபாலா கோஷத்துடன் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
மூலஸ்தானத்தில் பெருமாளை தரிசித்த பக்தர்கள் பத்மாவதி தாயார் மற்றும் வேணுகோபால் சன்னிதிகளிலும் தரிசித்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கபட்டது. பல ஆயிரம் பக்தர்கள் நேர்த்திகடன்களை செலுத்தினர். மாலை 4:00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் கிரிவலம் நடந்தது. நேற்று அதிகாலை முதல் மாலை 6:00 மணி வரை ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிசந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் , கோயில் பட்டர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.விருதுநகர்: விருதுநகர் அருகே மன்னார்கோட்டை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. புரட்டாசி மாத பலன்கள் குறித்து ஐயர் சுதர்சனன் பேசினார். ஜமீன்தார் துரைப்பாண்டியன், அமிர்தா பவுண்டஷேன் உமையலிங்கம் உட்பட கிராம மக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.