பதிவு செய்த நாள்
06
அக்
2019
03:10
தேனி:மாவட்டத்தின் பல்வேறு பகுதி பெருமாள் கோயில்களில் நேற்று புரட்டாசி 3வது சனி சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தேனி அல்லிநகரம் வரதராஜபெருமாள் கோயில், என்.ஆர்.டி.,நகர் கணேச கந்தபெருமாள் கோயில்களில் சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.கூடலுார்: கூடலுார் கூத்தமலை பெருமாள் கோயிலில் சுவாமிக்கு துளசி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதிகாலையில் சிறப்புபூஜை, தீபாராதனை நடந்தது. பெருமாள் குறித்த பாராயணம் நடந்தது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு கூடலுார், கம்பம், குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்தனர். கோயில் விழாக்கமிட்டியினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. * பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதிகாலை 5:00 மணிக்கு சுப்ரபாத சேவையுடன் பூஜை துவங்கியது. மூலவர் வரதராஜப்பெருமாள், திருப்பதி திருவேங்கடமுடையான் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
* நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், கிருஷ்ணர், ராதைக்கு திருமஞ்சனத்தை தொடர்ந்து பூஜைகள் நடந்தது. அனைவருக்கும் சகல ஐஸ்வர்யம் கிடைக்க வேண்டி ஹரே ராம நாமகீர்த்தனம் கூட்டு பிரார்த்தனை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாமத்வார் பொறுப்பாளர் கிருஷ்ணசைதன்யதாஸ், பக்தர்கள் செய்தனர்.
கோம்பை: கோம்பை திருமலை ராயப்பெருமாள் மலைக்கோயிலில் சுயம்பு மூலவருக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர் உள்ளிட்ட 7 வகை அபிஷேகங்கள் நடந்தன. ஊர் கோயிலில் நவராத்திரி திருவிழா நடப்பதால், உற்சவர் கொலுவில் வீற்றுள்ளார். ஐதீகப்படிசக்கரத்தாழ்வார் மலைக்கோயிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். மலைக்கோயிலில் கொடிமரத்தருகே அமைக்கப்பட்ட குடிலில் சிறப்பு பூஜைகள் நடைறெ்றன. வெளியூர் பக்தர்களின் வசதிக்காக தேவாரம், கம்பத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் மலையடிவாரத்திற்கு இயக்கப்பட்டன. மத்திய கேரள பகுதியில் இருந்து ராமக்கல் வனப்பாதை வழியாக வந்த பக்தர்களுக்கு உழவார பணிக்குழு சார்பில் உணவு, குடிநீர் வழங்கப்பட்டன.
தேவாரம் : தேவாரம் மலைரெங்கநாதர் கோயிலில் தேவாரம் அரண்மனை சார்பில் மலர் சாத்துபடி நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் மூலவர் அருள்பாலித்தார். தேவாரம் ஏலக்காய் வர்த்தக சங்கம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சதுரகிரி, பழநி பாதயாத்திரை பக்தர்கள் குழு நிர்வாகிகள் கணேஷ் பாண்டியன், பாண்டியன் செய்திருந்தனர்.