பதிவு செய்த நாள்
06
அக்
2019
03:10
உடுமலை: உடுமலை சுற்றுப்பகுதியில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி, பெருமாள் கோவில்களில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.உடுமலை, சின்னாறு வனப்பகுதியில் உள்ள, ஏழுமலையான் கோவிலில், புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பக்தர்கள், மலைப்பகுதியில் நடந்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பெருமாளுக்கு பால், தயிர், உட்பட பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. பெருமாளுக்கு அவுல் படைத்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. உடுமலை திருப்பதி, ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவிலில், சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பாசுரங்கள் சேவை நடந்தது.நெல்லுக்கடை வீதி, ஸ்ரீ சவுந்தரராஜ பெருமாள் கோவில், ஸ்ரீ நவநீத கிருஷ்ண பெருமாள் கோவில், பள்ளபாளையம் வரதராஜ பெருமாள் கோவில், ஜல்லிபட்டி, கரட்டு பெருமாள் கோவில், அடிவள்ளி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், கொங்கல் நகரம் கரிவரதராஜ பெருமாள் கோவில், பொட்டையம்பாளையம் வேணுகோபால கிருஷ்ணன் கோவில் உட்பட உடுமலை சுற்றுப்பகுதியிலுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.
மடத்துக்குளம் ஒன்றியத்திலுள்ள பாப்பான்குளத்தில், ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாஜலபதி சுவாமி கோவிலில், சுவாமிகளின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.நேற்று அதிகாலையில், நாலாயிர திவ்ய பிரபந்தம் சேவை, கும்ப அர்ச்சனை, அஷ்டலட்சுமி ேஹாமத்தை தொடர்ந்து காலை, 10:30 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாஜலபதி சுவாமிகள், திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திருமண கோலத்தில் சுவாமிகளுக்கு கோடி தீப தரிசனம், தசாவதாரம், தசதரிசனத்துடன் தீபாராதனை நடந்தது.