ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் சாரதா மாரியம்மன் சுயம்பாக தோன்றியவள். அடையாளத்திற்காக குழந்தை ரூபமாக சிலை வடித்து பக்தர்கள் பிரதிஷ்டை செய்தனர். இவளை ‘டவுன் மாரியம்மன்’ என்றனர். ஒரு காலத்தில் இவ்வூர் வீரபாண்டி என்று பெயர் பெற்றிருந்தது. அப்போது கிராமமாக இருந்த ஊர் இன்று நகரமாகி விட்டது. சிருங்கேரி சாரதா பீடாதிபதி அபிநய வித்யா தீர்த்த சுவாமிகளின் கனவில் இந்த மாரியம்மன் தோன்றினாள். அவர் இந்த கோயிலைத் தேடிச் சென்று வழிப்பட்டார்.
பின் டவுன் மாரியம்மன் என்ற பெயர் மாறி ‘சாரதா மாரியம்மன்’ என்று பெயர் சூட்டப்பட்டது. சுவாமிகள் அன்னையின் மூலஸ்தானத்தில் அமர்ந்து வழிபடும் போது, ‘தீர்த்தத்தையும், இரண்டு தேங்காய்களையும் இங்கு வைத்துவிட்டு செல்லவும்’ என அசரீரி ஒலித்தது. அதன்படி, சுவாமி இரு தேங்காய்களை அன்னையின் பாதத்தில் வைத்து சென்றார். அந்த இரண்டு தேங்காய்களும் கடந்த 45 ஆண்டுகளாக நிறம் கூட மாறாமல் அப்படியே உள்ளது. இந்த தேங்காய்களுக்கு செவ்வாய், வெள்ளிகிழமை மற்றும் அமாவாசை தினங்களில் சகஸ்கரநாம அர்ச்சனை செய்து, வடை, பாயாசம் நைவேத்யம் செய்யப்படுகிறது.