பதிவு செய்த நாள்
25
அக்
2019
02:10
திருச்செந்துாரில் உற்ஸவரான ஜெயந்திநாதர் கந்தசஷ்டியன்று சூரசம்ஹாரம் நிகழ்த்தியபின் பிரகாரத்திலுள்ள மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருள்வார். அப்போது சுவாமியின் எதிரே ஒரு கண்ணாடி வைக்கப்பட்டு அதில் தெரியும் ஜெயந்திநாதரின் பிம்பத்திற்கு அபிஷேகம் செய்வார். இதை சாயாபிஷேகம் என்பர். சாயா என்றால் நிழல் என்பது பொருள். போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த அபிஷேகம் நடக்கும். முருகப்பெருமானே கண்ணாடியில் கண்டு மகிழ்வதாக ஐதீகம்.
கடலில் கங்கை பூஜை : தினமும் முருகப்பெருமானுக்கு உச்சிக்கால பூஜை முடிந்ததும் ஒரு பாத்திரத்தில் பால், அன்னம் எடுத்துக்கொண்டு மேள, தாளத்துடன் புறப்பட்டு கடலில் கரைக்கின்றனர். இதனை கங்கை பூஜை என்கின்றனர். இங்குள்ள சரவணப்பொய்கையில் ஆறு தாமரை மலர்களில் முருகன் ஆறுகுழந்தைகளாக தவழ, நடுவே கார்த்திகைப்பெண்கள் வீற்றிருக்கும் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சந்தனக் காட்டுக்குள்ளே...: திருச்செந்துார் பகுதியினர் பாடும் நாடோடிப்பாடல்களில் சந்தனக் காட்டுக்குள்ளே கந்தனை நான் கண்டு கொண்டேன் என்னும் வரி இடம் பெற்றுள்ளது. முருகன் கோயில் உள்ள பகுதிக்கு சந்தன மலை என்றும் பெயருண்டு. திருப்புகழில், சந்தனப் பைம்பொழில் தண் செந்தில் என்று சந்தன சோலையாக திருச்செந்துார் இருப்பதை 15ம் நுாற்றாண்டில் வாழ்ந்த அருணகிரிநாதர் குறிப்பிடுகிறார். ஆனால் தற்போது சந்தனமரம் அங்கில்லை. பக்தர்களுக்கு சந்தனம், விபூதி பிரசாத தருகின்றனர்.
ஒன்றல்ல... இரண்டு : குழந்தைகளுக்கு தெய்வங்களின் ஆயுதத்தை பெயராக வைக்கும் வழக்கமில்லை. சூலம், உடுக்கை, ஈட்டி என்று யாராவது பெயர் வைக்கிறார்களா? ஆனால் முருகனின் வெற்றிவேலைச் சிறப்பிக்கும் விதத்தில் வெற்றிவேல், கதிர்வேல், தங்கவேல், சக்திவேல், வடிவேல், முத்துவேல், வேலாயுதம், என பெயரிடுகிறார்கள். கச்சியப்பர் கந்தபுராணத்தில் "திருக்கைவேல் போற்றி போற்றி!" என்று முருகனின் வேலினைப் போற்றுகிறார். முருகனுக்கு ஆறுமுகங்கள் போல வேலுக்கும் ஆறுமுகங்கள் உண்டு.
அஷ்டலிங்க தரிசனச் சிறப்பு!: கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கரு வறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். அஷ்ட லிங்கங்களும் இங்கு இடம்பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்குகிறார் என்பதை விளக்குவதற்காகவே. முரு கன் சன்னிதியில் முருகனுடன் பஞ்ச லிங்கங் களைக் கண்ணாலும் மற்ற லிங்கங்களை மனதாலும் பூஜிக்க வேண்டும். அப்போது தான் நமது பிரார்த்தனை முற்றுப்பெறும். அஷ்ட லிங்கங்கங்களில் பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை நடக்காது. ஏனெனில், முருகப் பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதிகம்.
நைவேத்தியச் சிறப்பு: மூலவருக்கான நைவேத்தியத்தில் காரம், புளி ஆகியவற்றைச் சேர்ப்தில்லை. சண்முகருக்கான நைவேத்தியங்களில் காரம், புளி உண்டு. பருப்புக் கஞ்சி,தோசை, தேன்குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினை மாவு ஆகியவை இடம்பெறுகின்றன. உதய மார்த்தாண்ட பூஜையின்போது தோசை, சிறுபருப்புக் கஞ்சி ஆகியவை நைவேத்தியத்தில் இடம்பெறுகின்றன. இரவு நேர பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் ஆகியன நிவேதிக்கப்படுகிறது.
பூஜை சிறப்பு: செந்திலாண்டவர் ஒருமுகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகரு க்கு சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு மூலவர் தவக்கோலத்தில் இருப்பதாக ஐதிகம்.
தினமும் காலை சுமார் 5:30 மணிக்கு கொடி மரத்தின் முன்பு திருவனந்தல் எனப்படும் விஸ்வரூப தரிசனம் நடைபெறும். அப்போது குமாரோபனிஷத்தில் உள்ள துவாதச நமஸ்காரம் செய்யப்படுகிறது. விராட் புருஷனின் பாத ஸ்தானத்தில் செந்தூர் அமைந் திருப்பதால், இது தினமும் நடைபெறுகிறது. உச்சிக் காலம் முடிந்ததும், மேளதாளத்துடன் கடற்கரைக்குச் சென்று கங்கைக்கு சுத்த அன்னம் படைக்கப்படுகிறது. இரவு சுமார் 9:45 மணிக்கு சுவாமிக்குத் திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்துத் தீபாராதனை செய்வர். இதை ரகசிய தீபாராதனை என்கிறார்கள்.
சஷ்டி விரதச் சிறப்பு: சிக்கிலில் வேல் வாங்கி, செந்தூரில் சூரசம்ஹாரம் என்பது பழமொழி. தேவர்களின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஆறுமுகன், சூரபத்மனுடன் போரிட்டு அழித்தபின் தன் படைகளுடன் செந்தூரில் வந்து தங்கினார். அங்கு ஈசனை வழிபடுவதற்கு தேவதச்சன் மயனை அழைத்து கோயில் ஒன்றை எழுப்பினார். அதுவே இன்று நாம் காணும் திருச்செந்தூர் கோயில். இங்கே சஷ்டி விரதம் ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகிறது. சஷ்டி விரத காலத்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் அமர்ந்து விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும்.
கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின் போது கடல்நீர் உள் வாங்கும் அற்புதம் இன்றும் தொடர்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் செந்திலாண்டவர் எதிரே கண்ணாடி வைத்து, கண்ணாடிக்கு அபிஷேகம் நடைபெறும். இதை சாயாபிஷேகம் (சாயா -நிழல்) என்பர்.
திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் பத்து வயதுக்கு உட்பட குழந்தைகளுக்கு சித்திரை, வைகாசி, கார்த்திகை மாதங்களில் பால்குடம் எடுப்பது சிறப்பு. இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோரது தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.