திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கோவர்த்தனாம்பிகை அம்பாளிடமிருந்து சுவாமி வேல் வாங்கும் நிகழ்ச்சி இன்று (நவ., 1) மாலை 6:30 மணிக்கு நடக்கிறது.
சஷ்டி விழாவை முன்னிட்டு நாளை (நவ., 2) சூரசம்ஹாரலீலை நடக்கிறது. இதற்காக இன்று மாலை 6:30 முதல் 7:30 மணிக்குள் வேல் வாங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. சத்திய கிரீஸ்வரர், கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சர்வ அலங்காரத்தில் சுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருள்வார். மூலவர்கள் சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகைக்கு பூஜை முடிந்து, விழா நம்பியார் சிவாச்சாரியாருக்கு பரிவட்டம் கட்டப்படும். அம்பாள் கரத்திலிருக்கும் நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெறப்பட்டு நந்தியை வலம் வந்து சுவாமி கரத்தில் சாத்துப்படி செய்யப்படும். தீபாராதனை முடிந்து சுவாமி பூ சப்பரத்தில் திருவாட்சி மண்டபத்தை ஆறுமுறை வலம் வந்து அருள்பாலிப்பார்.