கம்பம்: கம்பம் பகவதியம்மன் கோயில் திருவிழா நவ. 5 காலையில் மஞ்சள் நீராட்டத்துடன் துவங்கியது. தொடர்ந்து மண்ணால் புதிதாக செய்யப்பட்ட அம்மன் சிலை அழைப்பு நடைபெற்றது. அம்மன், கோயிலிற்கு வந்ததும், நுாற்றுக் கணக்கில் பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். நேற்று காலை பொங்கலிடுதல், முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பெண்கள் முளைப்பாரியை சுமந்து கோயில் முன் வைத்து பாடல் பாடினர். பின்னர் முல்லையாற்றில் கரைக்கப்பட்டது. மாலையில் வண்டிவேஷம் நடைபெற்றது. நுாற்றுக்கணக்கான ஒக்கலிக இளைஞர்கள் பல்வேறு சுவாமி, அம்மன் வேடமணிந்து நகர்வலம் வந்தனர். வண்டிவேஷம் நந்தகோபாலன் சுவாமி தம்பிரான் மாட்டுத்தொழுவில் துவங்கி, ரத வீதிகள் வழியாக மீண்டும் கோயிலை அடைந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா வந்தார். பின்னர் முல்லையாற்றில் அம்மன் சிலை கரைக்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை கம்பம் காமுகுல ஒக்கலி கர் (காப்பு) மகாஜன சங்கத்தினர் செய்தனர்.