உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் திருக்கோயில் அன்னதான திட்டத்தில் வாழை இலைக்கு பதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் இலை பயன்படுத்தப்படுகிறது. பழமையும், பெருமையும் வாய்ந்த உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள், யாத்திரீகர்கள் சுவாமி தரிசனத்திற்காக வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற இக்கோயிலில் தமிழக அரசின் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதையடுத்து, தினமும் பகல் 12:30 மணிக்கு உத்தரகோசமங்கை வரும் பக்தர்கள் 50 பேரை மட்டும் தேர்வு செய்து அன்னதானம் வழங்குகின்றனர். வாழை இலையில் உணவு பரிமாறுவதற்கு பதிலாக பிளாஸ்டிக் இலையில் பக்தர்களுக்க அன்னதானம் வழங்கப்படுகிறது. இதனால் பக்தர்கள் அதிருப்தி அடைகின்றனர். தமிழக அரசு பிளாஸ்டிக் இலைகளுக்கு தடை விதித்துள்ள நிலையில் அரசு நிர்வாகத்தில் உள்ள கோயிலில் பிளாஸ்டிக் இலை பயன்படுத்துவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. எனவே, வாழை இலையில் 50 பேருக்கு தினமும் அன்னதானம் வழங்க சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.