சத்தியமங்கலம்: மழையில்லாமல் பயிர்கள் காய்ந்து வருவதால் மலைகிராம பழங்குடி மக்கள் மழை வேண்டி நுதன முறையில் பூஜை செய்து ஊரை சுற்றி வலம் வந்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரை அடுத்துள்ளது அரிகியம் மலைகிராமம்.250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவ்வூரை சுற்றிலும் உள்ள நிலங்கள் பெரும்பாலானவை வானம் பார்த்த மானாவாரி பூமிகள் தான் .ராகி,சோளம்,குச்சிக்கிழங்கு,போன்றவை மட்டுமே சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது சோளம்,அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.கடந்த 1மாதமாக மழை இல்லாததால் சோளப்பயிர்கள் காய்ந்து கருகி வருகிறது.இதனால் பெருத்த நஷ்டம் ஏற்படும்.
இங்குள்ள ஊராளி எனும் பழங்குடி மக்கள் பாரம்பரியமாக மழை இல்லாத காலத்தில் அனைத்து பெண்களும் ஒன்று கூடி வீடுவீடாக சென்று ராகி மாவு சேகரித்து மாரியம்மன் கோவிலில் கூழ்காய்ச்சி பூஜை செய்து வெள்ளை சீலை உடுத்திய பெண் தலையில் ஆறிய கூழை வைத்து ஊரை சுற்றியும் வலம் வந்து , கரண்டியில் கூழைஎடுத்து பின்னால் வரும் பெண்கள் மீது ஊற்றி விளையாடுவார்கள். இதேபோல் மழைவேண்டி நுதன முறையில் ராகி கூழ் ஊற்றினர்.இவ்வாறு செய்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம்.