Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் >> அருள்மிகு யதுகுல கண்ணன் பால கிருஷ்ணன் திருக்கோயில்
  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்
அருள்மிகு யதுகுல கண்ணன் பால கிருஷ்ணன் திருக்கோயில்
 
[Image1]
 
 
 
மூலவர்: யதுகுல கண்ணன் பால கிருஷ்ணன்
  ஆகமம்/பூஜை : பாஞ்ச ராத்ர ஆகமம்
  ஊர்: இடையர்பாளையம்
  மாவட்டம்: கோயம்புத்தூர்
  மாநிலம்: தமிழ்நாடு
 
 திருவிழா:
     
  புரட்டாசி சனி, கிருஷ்ண ஜெயந்தி  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 5.30 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும். மார்கழியில் காலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படும். 
   
முகவரி:
   
  அருள்மிகு யதுகுல கண்ணன் கிருஷ்ணன் கோயில் இடையர்பாளையம், குனியமுத்தூர் அருகில் கோவை பாலக்காடு வழி, கோயம்புத்தூர்  
   
    
 பொது தகவல்:
     
  கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தீபஸ்தம்பம் கோயிலின்  முன்பு செல்லும் காலையின் மறுபக்கம் அமைந்திருந்தது. தெருவினை தீட்டு உள்ளவர்கள் மற்றும் அமங்கல மானோர் பயன்படுத்தும் போது கோயிலுக்கும் தீபஸ்தம்பத்திற்கும் இடையே செல்ல நேரிடுகிறது. அதைத் தவிர்ப்பதற்காக கோயிலை ஒட்டியே சிறிது இடை வெளிவிட்டு தீபஸ்தம்பத்தை மாற்றி அமைத்துள்ளனர்.

முன்மண்டப நுழைவு வாயிலின் மேற்புறம் சிறிய மண்டபத்துள் பாமருக்மணி சமேதராய் பசுவுடன் புல்லாங்குழல் ஊதும் கோலத்தில் வலது காலை மடித்துள்ள நிலையில் சுதைச் சிற்பமும், அதன் அருகில் தென்புறம் சங்கு சக்கரத்துடன் கூடிய ராமம் ஆகியவை அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகின்றன. இருபுற மூலைகளில் ஆஞ்சநேயர் இருகரங்கள் குவித்து அமர்ந்தநிலையில் உள்ளார்.

மகா மண்டபத்தை அடுத்து அர்த்த மண்டபத்தின் இருபுறமும் ஜெயன் விஜயன் கம்பீரமாக காவல் புரிய சிறிய கருவறையில் நின்ற கோலத்தில் வலதுகையில் எண்ணெயை ஏந்தியும் இடதுகரத்தை இடுப்பில் வைத்தபடி, புன்னகை ததும்பும் அற்புத பேரழகனாய் எழுந்தருளி உள்ளார். எதிரே கருடன் சேவை சாதிக்கின்றார்.
 
     
 
பிரார்த்தனை
    
  குழந்தை பாக்கியம் வேண்டுதல் முக்கிய பிரார்த்தனையாகும். 
    
நேர்த்திக்கடன்:
    
  கிருஷ்ணனுக்கு பிடித்த வெண்ணெய் வைத்து, அர்ச்சனை செய்து வழிபாடு செய்கின்றனர். 
    
 தலபெருமை:
     
  இங்கு சனிக்கிழமைகள், திருவோண நட்சத்திர தினம், மார்கழி மாதம் முழுதும் புரட்டாசி சனிக்கிழமைகள் சிறப்பு நாட்களாகக் கொண்டாடப்பட்டாலும் 3 நாட்கள் கொண்டாடப்படும் கிருஷ்ண ஜெயந்தி வைபவம் வருட தலையாய உற்சவம் ஆகும். முதல் நாள் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் சந்தான கிருஷ்ணனை தொட்டிலில் இட்டு தாலாட்டு பாடல் பாட விழா வெகு விமர்சையாக நடைபெறும். திருமணம் ஆகி குழந்தைப் பேறு கிட்டாமல் உள்ள தம்பதியினர் இப்பூஜையில் கலந்து கொண்டு வேண்டினால் நிச்சயம் குழந்தைபாக்கியம் கிட்டுகின்றதாம். அவ்வாறு பலன் பெற்ற ஒரு தம்பதியினர், கோயிலுக்கு வெள்ளியினாலான தவழ்ந்து வரும் சந்தான கிருஷ்ண விக்ரஹத்தை நேர்த்திக் கடனாக வழங்கி உள்ளனர். அந்த விக்ரஹம் தான் இப்பூஜையில் பயன்படுத்தப்படுகிறது என்பது சிறப்பு. அன்றிரவு உற்சவ மூர்த்திகளான பாமருக்மணி சமேத கோபால கிருஷ்ணன் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்கள் புடைசூழ வாத்திய இசையுடன் திருவீதி உலா வருவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இரண்டாம் நாள் கலை நிகழ்ச்சி ஆன்மிக சொற்பொழிவு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். மூன்றாம் நாள் கோகுலாஷ்டமியின் முக்கிய தினமாகும். வீரர்கள் தங்கள் வீரத்தை வெளிப்படுத்தும் நிகழ்வாகும். திருமணமாகாத இளைஞர்கள் பங்குபெறும் நிகழ்வு. எண்ணெயில் நன்கு ஊறிய  மரத்தின் உச்சியில் விலைஉயர்ந்த பரிசுப் பொருட்கள், பணம் ஆகியவற்றை பையில் வைத்து மரத்தின் உச்சியில் கட்டி விடுவர். இளைஞர்கள் மரத்தில் ஏறி வெற்றி பெற்றால் அப்பரிசுப் பொருட்களைப் பெறலாம். வழுக்கு மரத்தில் ஏற முயற்சி செய்து வழுக்கி விழுவதும் மீண்டும் முயற்சித்து தோல்வியைத் தழுவுவதும் கூடி இருப்போரை உற்சாகத்தில் ஆழ்த்தும், மரம் ஏறுபவர்கள் மீது தண்ணீரை பீச்சி அடிப்பர் இந்நிகழ்வினை வழுக்கு மரம் ஏறுதல் என அழைப்பர்.

அடுத்து சிறிய குழந்தைகள் பங்கு பெறும் உறியடி உற்சவம் இந்நிகழ்வில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்பர். பரிசுப்பொருட்களை ஒரு மண் சட்டியில் வைத்து கயிற்றின் ஒரு முனையில் கட்டி, மறுமுனையை உருளை வழியாக பிடித்துக் கொள்வர். குழந்தைகள் எம்பி எம்பி குதித்து தடியால் அடிக்கும் போது உயரத்திற்கு கொண்டு சென்று விடுவர். உறி அடித்து வெற்றிபெற்றால் உறியினுள் உள்ள பரிசுப் பொருட்கள் வெற்றிபெற்ற குழந்தைக்கு வழங்கப்படும். இந்நிகழ்வு பார்ப்போரை பரவசப்படுத்தும்.

மேற்கூறிய இரு நிகழ்வுகளும் வீரத்தின் வெளிப்பாட்டை வெளிக் கொணரும் நிகழ்வாகும் கிருஷ்ண பரமாத்மாவின் திருவிளையாடல்களை இங்கு நிகழ்த்துவது இவ்விழாவின் நோக்கமாகும். வடமாநிலங்களில் கிருஷ்ணன் பிறந்த தினத்தை கோகுலாஷ்டமி எனும் பெயரில் மிகப் பிரமாண்டமாய் கொண்டாடி வருகின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி அடர்ந்த மரங்கள் சூழ்ந்த வனப்பகுதியாக இருந்தது. இங்கு வாழ்ந்த மக்களின் முக்கிய தொழில் ஆடு மாடுகளை வளர்த்தலும் பால், தயிர், வெண்ணெய் போன்ற பொருட்களை விற்பதும் தான்.

மைசூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட திப்புசுல்தான் கேரள நாட்டிற்குச் செல்லும்போது குனியமுத்தூரில் தங்கிச் செல்வது வழக்கம். அப்போது அவர் தொழுகை நடத்திய இடம் தற்போது மசூதி ஆக உள்ளது. இங்கு வசித்த மக்கள் பிரதான, சாலையருகே வசிக்காமல், சற்றுத் தள்ளி ஒதுக்கப்புறமான இடத்தில் தங்கள் குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து வந்தனர். பிரதான சாலையின் அருகே வசித்தால் கள்வர்களின் நடமாட்டம் அதிகம் இருக்கும். கள்வர்களின் பாதிப்பும், கொள்ளையும் அதிக அளவில் இருக்கும். எனவே பிரதான சாலையிலிருந்து சிறிது தூரம் தள்ளியே தங்கள் குடியிருப்புகளை அமைத்துக் கொள்வர்.

பகல் வேளையில் கால் நடைகளை மேய்ச்சலுக்காக காட்டுப் பகுதிக்கு ஓட்டிச் செல்வர். மாலையில் கால் நடைகளை திரும்ப ஓட்டி வந்து புராதனமான மாரியம்மன் கோயிலுக்கு அருகே உள்ள மாட்டுப்பட்டியில்  அடைத்து வைப்பர். சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு மாட்டுப்பட்டியின் அருகே அனைவரும் அமர்ந்து தங்கள் குல தெய்வமான கிருஷ்ணன் மீது பஜனைப்பாடல்களை பாடிவருவர். ஒரு கால கட்டத்தில் மாட்டுப் பட்டி அருகே சிறு குடிலை அமைத்து அதில் கிருஷ்ணன் படத்தை வைத்து பூஜித்து பஜனைப் பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர்.

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் அவ்வூரில் உள்ள முதியவர் ஒருவர் கனவில் பால கிருஷ்ணன் தோன்றி, தான் பஜனை  செய்துவரும் இடத்தில் தான் வாசம் செய்கிறேன். தனக்கு ஒரு கோயில் கட்டி, அதில்  எனக்கு ஒரு சிலையை நிறுவி பூஜித்து வாருங்கள். நீங்கள் எந்தக் குறையும் இல்லாமல் நல்வாழ்வு வாழ்வீர்கள். எனக் கூறினார். முதியவர் குலதெய்வமான பால கிருஷ்ணனே தன் கனவில் வந்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம் அடைந்தார். காலையில் தமது சொந்தங்களை எல்லாம் அழைத்து விபரத்தைக் கூறினார்.

இறைவனே உத்தரவு பிறப்பித்த பின் தடங்கல் என்ன வரப்போகிறது? கிருஷ்ண பகவான் விருப்பப்படியே அழகிய வடிவில் சிறிய கோயில் ஒன்றைக் கட்டி அதில் சிறிய அளவிலான சிலையை பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தனர். பாலகிருஷ்ணனின் படத்தையும் வைத்து பஜனை செய்து வந்தனர். சுற்று வட்டாரத்தில் கிருஷ்ணனுக்கென தனிக் கோயில் கிடையாது.

ஊரின் மக்கள் தொகை அதிகரிப்பாலும், புதியதாக குடியேறியவர்  எண்ணிக்கை கூடியதால் ஊரின் பரப்பளவு அதிகரித்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் கூடியதால் கோயிலைச் சார்ந்தவர்கள் கோயில் விரிவாக்கதைப் பற்றி சிந்திக்கத் தொடங்கினர். குல பெரியவர்களின் ஒத்துழைப்புடனும் ஊர் மக்களின் ஆதரவுடனும் கல்வேலைப்பாடுகளுடன் கருவறை, விமானம் அர்த்த மண்டபம் மகா மண்டபம் என கட்டிட திருப்பணிகள் வெகு விரைவில் முடிக்கப்பட்டன. புதியதாக செய்யப்பட்ட பாலகிருஷ்ணன் சிலை, கருடன் சிலை மற்றும் காவல்தெய்வங்களான ஜெயன் விஜயன் சுதைச் சிற்பங்கள் நிறுவப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக வேத பண்டிதர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது.

இருபது ஆண்டுகளுக்கு பின் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 05.06.2017 அன்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை
 
     
சிறப்பம்சம்:
     
   
     
     
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar