2009 கும்பாபிஷேகம் — அன்றும் இன்றும்
2009 ஏப்ரலில் நடைபெற்ற கடைசி கும்பாபிஷேகத்தை தினமலர் நிழற்படக் கலைஞர்கள் பதிவு செய்தனர். அன்றைய காட்சிகளையும் இன்றைய காட்சிகளையும் அருகருகே வைத்துப் பாருங்கள்.
2009 ஏப்ரலில் நடைபெற்ற கடைசி கும்பாபிஷேகத்தை தினமலர் நிழற்படக் கலைஞர்கள் பதிவு செய்தனர். அன்றைய காட்சிகளையும் இன்றைய காட்சிகளையும் அருகருகே வைத்துப் பாருங்கள்.
தினமலர் காப்பகம் · · பக்கம் 1
மதுரை, ஏப். 9 —
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று வேதங்கள் ஒலிக்க, திருமுறைகள் ஒலிக்க கோலாகலமாக நடந்தது.
இக்கோயில் திருப்பணிகள் 2 ஆண்டுகளுக்கு முன்பு 6 கோடி ரூபாயில் துவங்கியது. தற்போது 320 உபயதாரர்கள் மூலம் 14 கோடி ரூபாய்க்கு திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 30 கிலோ தங்கத்தில் அம்மன் சன்னதி கோபுரத்திற்கு தங்க கவசம் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 4 கோடி ரூபாய்.
கும்பாபிஷேக பூஜைகள் கடந்த மாதம் 26ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. ஏப். 2ல் யாகசாலை பூஜைகள் துவங்கின. கோயில் முழுவதும் உள்ள சன்னதிகளுக்கு ஒரே நேரத்தில் கும்பாபிஷேகம் நடத்துவது சிரமம் என்பதால், ஏப். 6ல் அம்மன், சுவாமி சன்னதிகளை சுற்றியுள்ள பரிவார மூர்த்தி சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
இதைத் தொடர்ந்து நேற்று அதிகாலை 3.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை நடந்தது. 5 மணிக்கு ஐந்து ராஜகோபுரங்கள் உட்பட 14 கோபுரங்களுக்கு கும்பநீரை சிவாச்சாரியார்கள் எடுத்துச் சென்றனர். அம்மன், சுவாமி தங்க விமானத்தில் காலை 8 மணிக்கு கும்பநீர் கொண்டு வரப்பட்டு கும்பாபிஷேக பூஜைகள் நடந்தன.
காலை 9.17 மணிக்கு அறங்காவலர் குழுத் தலைவர் கருமுத்து கண்ணன் பச்சைக்கொடி காட்ட, ஓம் நமசிவாயா என்று பக்தர்கள் முழங்க, ஒரே நேரத்தில் தங்க கோபுரங்கள் உட்பட அனைத்து கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
நீர் தெளிப்பான் இயந்திரங்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. மூலஸ்தானத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து நேற்றிரவு 7 மணிக்கு அம்மன், சுவாமி மூர்த்திகள் புறப்பாடாகி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்தனர். இன்று மண்டலாபிஷேகம் துவங்குகிறது.
அன்றைய தினமலர் பதிப்பில் செய்திக்கு அருகே வெளியான குறிப்புகள்.
இரு கும்பாபிஷேகங்களுக்கும் இடையே கோபுரத்தின் சுதைச் சிற்பங்கள் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டு வண்ணம் தீட்டப்பட்டுள்ளன.
2018 தீ விபத்துக்குப் பிறகு இந்த மண்டபம் முழுமையாகப் புதுப்பிக்கப்பட்டது. 2009-ல் எடுக்கப்பட்ட படம் தீ விபத்துக்கு முந்தைய நிலையைக் காட்டுகிறது.
கும்பாபிஷேக முகூர்த்தத்தின் முதல் கட்டம் தங்க விமானங்களுக்கே உரியது — 2009-லும் இதே வரிசைதான்.
குளக்கரை நடைபாதையின் தூண்களும் சுவர்க் கல்வெட்டுகளும் திருப்பணியில் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
2009 ஏப்ரல் 9 தினமலர் பக்கங்கள் — எங்கள் சொந்தக் காப்பகத்திலிருந்து. படத்தை தொட்டால் படிக்கக்கூடிய அளவில் திறக்கும்.