சிறப்பு மலர் · பகுதி 1 · பக்கம் 25 · 1 / 159
கும்பாபிஷேகம் என்றால்...
எங்கும் நிறைந்தவர் கடவுள். அவர் தன்னை எளிமைப்படுத்திக் கொண்டு உயிர்களின் நன்மைக்காக கோயிலில் எழுந்தருள்கிறார். அவரை அங்கு எழுந்தருளச் செய்து வழிபடுவதே கும்பாபிஷேகம். 'கும்பம்' என்றால் கலசம் என்று பொருள். 'அபிஷேகம்' என்றால் புனித நீரால் நீராட்டுவது என்று பொருள். கோயிலின் உச்சியில் உள்ள கலசங்களுக்கும், மூலவர் உள்ளிட்ட தெய்வ சிலைகளுக்கும் புனித நீர் ஊற்றி, கடவுள் சக்தியை மீண்டும் நிலைநிறுத்துவதே இதன் நோக்கம். கடவுள் எண்குணத்தான். அவர் எட்டு நிலைகளில் இருந்து அருள் வழங்குகின்றான். மண், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம், சூரியன், சந்திரன், ஆன்மா என இந்த எட்டு நிலைகளில் இருந்து திருவருள் புரிகின்றான். இந்நிலைப்பாட்டிலே செய்யப் பெறுதலே மகா கும்பாபிஷேகம் எனப்படும்.
- மண் வடிவாகக் குடத்திலும்,
- நீர் வடிவாகத் தீர்த்தத்திலும்,
- நெருப்பு ஹோமத்திலும்,
- காற்று வடிவாக மந்திர உச்சரிப்பிலும்,
- ஆகாய வடிவாக ஒலியின் விரிவிலும்,
- சூரிய வடிவாக ஒளியிலும்,
- இந்து (சந்திர) வடிவாக மனத்தின் குழைவாலும்,
- ஆன்ம வடிவாக உயிர்களின் ஏகோபித்த கூட்டு வழிபாட்டாலும் கடவுளை ஓரிடத்தில் நிலை நிறுத்தலே கும்பாபிஷேகம் ஆகும்.