சிறப்பு மலர் · பகுதி 2 · பக்கம் 45 · 90 / 159
சாம்பல் பூசுங்க
மதுரைக்கு வந்த திருஞானசம்பந்தர் சொக்கநாதர் மீது ஆலவாய்ப்பதிகம் பாடினார். பின் ஒரு மடத்தில் தங்கினார். இதையறிந்த சமணர்கள் அந்த மடத்திற்கு தீ வைத்தனர். மக்கள் செய்த பாவம் மன்னரைச் சேரும் என்ற நீதிப்படி, சமணர் வைத்த தீயானது கூன்பாண்டியனை வெப்புநோயாக தாக்கியது. தன் கணவரின் நோய் பொறுக்காத மங்கையர்க்கரசியார், ஞான சம்பந்தரிடம் முறையிட்டார். அவரது வேண்டுகோளின்படி ‘மந்திரமாவது நீறு’ என்ற திருநீற்று பதிகம் பாடிய சம்பந்தர் கோயிலின் மடப்பள்ளி சாம்பலைப் பூசி நோயை போக்கினார். ‘வேந்தனும் ஓங்குக’ என்ற பதிகத்தைப் பாடி பாண்டியனின் கூனையும் நிமிர்த்தி ‘நின்ற சீர் நெடுமாறன்’ என மாற்றினார். மங்கையர்க்கரசியார், குலச்சிறையார், நின்ற சீர் நெடுமாறன் மூவரும் நாயன்மார்கள் வரிசையில் இடம் பெற்றனர். சம்பந்தர் தங்கிய மடம் திருஞானசம்பந்தர் ஆதீனத் திருமடமாக தெற்கு ஆவணி மூலவீதியில் உள்ளது. மீனாட்சியம்மன் கோயிலில் முக்குறுணி விநாயகர் சன்னதிக்குள் நுழையும் வழியில் மாடக்குழியில் மடப்பள்ளி சாம்பலை பக்தர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது.