பதிவு செய்த நாள்
16
நவ
2019
05:11
சபரிமலை : சுவாமியே சரணம் அய்யப்பா என்ற சரணகோஷம் முழங்க, சபரிமலை நடை திறக்கப்பட்டது. மண்டல காலம் நாளை (நவ. 17) துவங்கி 41 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை நடைபெறும்.
கார்த்திகை முதல் தேதி துவங்கி 41 நாட்கள் தொடர்ச்சியாக பூஜை நடைபெறும் காலம் மண்டல காலம். இந்த பூஜைக்காக இன்று (நவ.,16) மாலை 4.55 மணியளவில் சபரிமலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி சரணகோஷம் முழங்க, நடை திறந்து விளக்கேற்றினார். தொடர்ந்து குண்டத்தில் நெருப்பு வளர்த்த பின் மூலஸ்தானம் வந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
புஷ்பாபிஷேகம், தீபாராதனை: 17 ம் தேதி காலை 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றியதும் மண்டலகாலம் தொடங்கும். தந்திரி கண்டரரு மகஷே் மோகனரரு நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். பின்னர் கணபதி ஹோமம் நடைபெறும். தொடர்ந்து உச்சபூஜை, புஷ்பாபிஷேகம், தீபாராதனை, அத்தாழ பூஜைகள் நடைபெறும். மதியம் உச்சபூஜைக்கு முன்னோடியாக களபாபிஷேகம் நடைபெறும். நிலக்கல்லில் 1200, சன்னிதானத்தில் 1161, பம்பையில் 404 குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கல்லில் 9 ஆயிரம், சன்னிதானத்தில் 6 ஆயிரத்து 500, பம்பையில் மூவாயிரம் பேர் தங்க வசதி செய்யப்பட்டுள்ளது. போதுமான கழிவறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. ரோடுகள் சீரமைக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் முன்பதிவும் விறுவிறுப்பாக உள்ளது.