பதிவு செய்த நாள்
14
ஜன
2026
08:01
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் அணிவித்து தீபாராதனையும்,ஜோதி தரிசனமும் நடைபெறுகிறது.
சபரிமலையில் மகர விளக்கு காலத்தின் முக்கிய நிகழ்வாக மகரஜோதி தரிசனம் இன்று மாலை நடக்கிறது. இதற்கு முன்பாக மகர சங்கரம பூஜை இன்று மாலை 3:08 மணிக்கு நடக்கிறது. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு கடக்கும் நேரத்தில் திருவிதாங்கூர் அரண்மனையிலிருந்து தூதர் மூலம் கொடுத்து விடப்படும் நெய் தேங்காய் உடைக்கப்பட்டு ஐயப்பன் விக்ரகத்தில் நேரடியாக அபிஷேகம் செய்யப்படும். இதற்காக இன்று மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்ட பின்னர் மீண்டும் 2:45 மணிக்கு திறக்கப்படும். 3:08 மணிக்கு மகர சங்கரம நெய்யபிஷேகம் நடைபெறும். அபிஷேகத்துக்கு பின்னர் நடை அடைக்கப்படாது. எனினும் பக்தர்களுக்கு தரிசனம் கிடையாது. திருவாபரணங்கள் வந்து தீபாராதனையும், ஜோதி தரிசனமும் முடிந்த பின்னரே பக்தர்கள் 18 படிகளில் ஏற அனுமதிக்கப்படுவர்.
பந்தளத்திலிருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட திருவாபரண பவனி இன்று மாலை 5:30 மணிக்கு சரங்குத்தி வந்தடையும். அங்கு தேவசம்போர்டு அதிகாரிகளின் வரவேற்புக்கு பின்னர் பெரிய நடைப் பந்தல் வழியாக 6:30 மணிக்கு சன்னிதானம் வந்தடையும். தந்திரியும் மேல் சாந்தியும் திருவாபரண பெட்டியை வாங்கி நடை அடைத்து ஆபரணங்கள் அணிவித்து நடை திறந்து தீபாராதனை நடத்துவர். இந்த நேரத்தில் கோயில் நேர் எதிரே கிழக்கு பக்கத்தில் மகர நட்சத்திரம் ஒளிவிட்டு பிரகாசிக்கும். தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி காட்சி தரும்.
இதை கண்டு தரிசிப்பதற்காக கடந்த ஐந்து நாட்களாகவே சன்னிதானத்தில் பக்தர்கள் முகாமிட்டுள்ளனர். பாண்டித்தாவளம், கொப்பரை களம், மாளிகைபுறம், இன்சினேட்டர், வாட்டர் டேங்க் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காடுகளில் செடி கொடி, இலைகள், துணிகள், போன்றவற்றால் தற்காலிக ஷெட்டுகள் அமைத்து அதில் தங்கி உள்ளனர். ஷெட்டுகளில் தீ விபத்தை தவிர்க்க சமையல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மகரஜோதி தரிசனம் முடிந்த பின்னர் பக்தர்கள் திருவாபரணங்கள் அணிந்த ஐயப்பனை தரிசிக்க முண்டியடிக்கும் போது நெரிசல் ஏற்பட்டு விடாமல் தடுக்க போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதற்காக பல்வேறு பாதைகளை தேர்வு செய்து திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தடுப்பு வேலிகள் அமைக்கப்படுகிறது. இன்று காலை 10:00 மணி வரை மட்டும் நிலக்கல்லில் இருந்து பம்பைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படும். காலை 11:00 மணி வரை பக்தர்கள் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அதன் பின்னர் திருவாபரண பவனி சரங்குத்தி வந்தடைந்த பின்னர் பம்பையில் இருந்து பக்தர்கள் சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
நாளை (ஜன.,15) அதிகாலை 3:00 முதல் 6:00 மணி வரை ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் காலை 6:00 மணிக்கு பின்னர் பம்பைக்கு வந்தால் போதுமானது என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. அதுபோல நாளை அதிகாலை வரை பத்தனம் திட்டா மற்றும் நிலக்கல்லிருந்து பம்பைக்கு தனியார் வாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கேரள அரசு பஸ்களுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சன்னிதானம் மற்றும் பம்பையில் 5500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜோதி தரிசனம் முடிந்ததும் பக்தர்கள் ஊர் திரும்புவதற்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் ஆயிரம் பஸ்களை தயார் நிலையில் நிறுத்தி உள்ளது.