சபரிமலையில் மகரஜோதி தரிசனம்; ஜோதி ரூபமாய் காட்சியளித்த சுவாமியை கண்டு பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜன 2026 09:01
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர நட்சத்திரத்தையும் தரிசித்து பக்தர்கள் பரவசமடைந்தனர்.
டிச.30 தொடங்கிய மகர விளக்கு காலத்தின் நிறைவாக இன்று சபரிமலையில் மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்த பின்னர் 3:30 மணிக்கு தொடங்கப்பட்ட நெய்யபிஷேகம் காலை 10.00 மணிக்கு நிறுத்தப்பட்டது. அதை தொடர்ந்து கோயில் சுற்றுப்புறங்கள் சுத்தம் செய்யப்பட்டு 12.00 மணிக்கு களபா பிஷேகம் 12.30 மணிக்கு உச்ச பூஜை முடிந்து ஒரு மணிக்கு நடை அடைக்கப்பட்டது.
மதியம் 2.45 மணிக்கு மகர சங்கரம பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. சூரியன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு மாறிய 3.08 மணிக்கு திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொடுத்து விடப்பட்ட நெய் தேங்காய்கள் உடைக்கப்பட்டு நேரடியாக ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை நடைபெற்றது. மாலை 5:30 மணிக்கு திருவாபரண பெட்டிகளை வரவேற்கச் செல்லும் தேவசம்போர்டு அலுவலர்களுக்கு தந்திரி மகேஷ் மோகனரரு மாலை அணிவித்து வழி அனுப்பி வைத்தார். இவர்கள் சரங்குத்தியில் பெட்டியை எதிர்கொண்டு அழைத்தனர்.
6:25மணிக்கு 18-ம் படி அருகே வந்த திருவாபரண பவனியில் இரண்டு பெட்டிகளும் மாளிகைபுறம் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஒரு பெட்டி 18 படிகள் வழியாக சன்னதி வந்ததும் தந்திரி மகேஷ் மோகனரரு, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோர் அதை வாங்கி 6.28 மணிக்கு நடை அடைத்தனர். ஐயப்பன் விக்ரகத்தில் அணிவித்து 6.41 மணிக்கு தீபாராதனை நடத்தினர். அந்த நேரத்தில் பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் ஒளி விட்டு பிரகாசித்தது, தீபாராதனை நடை பெற்று கொண் டிருந்த போதே பொன்னம்பலமேட்டில் மூன்று முறை ஜோதி காட்சி தந்தது. சரணம் ஐயப்பா என்ற கோஷத்துடன் பக்தர்கள் அதை வணங்கிய ஆனந்தத்தில் மலை இறங்கினர்.
ஜோதி தரிசனத்திற்காக இதுவரை இல்லாத அளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டிருந்தது. பக்தர்கள் செல்லும் பாதைகள் வழியாக மட்டுமே அனுப்பப்பட்டனர். இதனால் நெரிசல் குறைவாக இருந்தது. சன்னிதானத்தில் மட்டும் 2500 போலீசார் இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜோதி தரிசனத்திற்கு பின்னர் திருவாபரணம் அணிந்த ஐயப்பனை வணங்க நீண்ட கியூ காணப்பட்டது மத்திய அதி விரைவுப்படையினரும், கேரள போலீசாரும் இணைந்து இந்த கூட்டத்தை ஒழுங்கு படுத்தி கோயிலுக்குள் அனுப்பி வைத்தனர். நாளை முதல் 19-ம் தேதி வரை தினமும் இரவு படிபூஜை நடைபெறும். 20-ம் தேதி காலை 7:00 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக்கப்படும்.