பதிவு செய்த நாள்
24
நவ
2019
08:11
தேனி: அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் தேனி வீரபாண்டி சரஸ்வதி மஹாலில், சபரிமலை பக்தர்களுக்கான சேவை முகாம், 24 மணி நேர அன்னதானம் துவங்கியது.
ஆண்டுதோறும் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் சார்பில் வீரபாண்டியில் சபரிமலை பக்தர்களுக்கான சேவை முகாம் நடந்து வருகிறது. நேற்று துவங்கிய முகாமில் மாவட்டச் செயலாளர் ரமேஷ் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் வெங்கடேஷ் சங்க கொடி ஏற்றினார். செயல் தலைவர் பெருமாள் தலைமை வகித்தார். மத்திய பொதுக்குழு உறுப்பினர் பாரி முன்னிலை வகித்தார். அன்னதான முகாமை சிலமலை தொழிலதிபர் ரமேஷ் துவக்கி வைத்தார். மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். உயர்நிலைக்குழு செயலாளர் நவநீதகிருஷ்ணன் ஐயப்ப யாத்திரை, நோக்கம்,சந்திரன், ஐயப்ப விரத மகிமை குறித்து பேசினர்.
செயலாளர் கூறுகையில், வ. 23 முதல் ஜன. 16 வரை 24 மணி நேரமும் அன்னதானம், ஐயப்ப பக்தர்களுக்கு மருத்துவ உதவி, தங்கும் உதவி, ரூட் மேப் மூலம் சபரிமலை யாத்திரைக்கு வழிகாட்டுதல், இருமுடியில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டுதல், பாதயாத்திரை செல்வோருக்கு சாக்ஸ் வழங்குதல் உள்ளிட்டவையும், பக்தர்களின் வாகன ஓட்டுனர்களுக்கு ஓய்வெடுக்க வசதி, பக்தர்களுக்கு பாத சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.