பதிவு செய்த நாள்
24
நவ
2019
08:11
திருவாலங்காடு : வடாரண்யேஸ்வரர் கோவிலில், வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடைபெறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காட்டில் உள்ளது.
இக்கோவில், நடராஜ பெருமானின் ஐந்து சபைகளில் முதற்சபையான ரத்தின சபையாக விளக்குகிறது. இக்கோவிலில், 2010ம் ஆண்டு முதல், மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடந்து வருகிறது.மாந்தி என்பவர் சனி பகவானின் மகன் என்பதால், சனிக்கிழமைகளில் பரிகார பூஜை நடக்கிறது. மாந்தீஸ்வரர் பரிகார பூஜை செய்தால், அஷ்டம சனி (8ல் சனி), அர்த்தாஷ்டம சனி (4ல் சனி), ஜென்ம சனி தொல்லைகள் நீங்கும், திருமண தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், கடன் தொல்லை தீரும் உட்பட தோஷங்கள் நீங்கும் என்பதால், பக்தர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். வாரந்தோறும் சனிக்கிழமை காலை, 6:30 மணி முதல், காலை, 10:30 மணி வரை நடைபெறும் மாந்தீஸ்வரர் பரிகார பூஜை நடைபெறும். சில ஆண்டுகளாக, மாந்தீஸ்வரர் பரிகார பூஜைக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.இது குறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இரு ஆண்டுகளாக மாந்திஸ்வரர் பரிகார பூஜைக்கு, குறைந்தபட்சம், 80 - 175 பக்தர்கள் பூஜைக்கு கட்டணம் செலுத்தி பரிகாரம் செய்கின்றனர்.ஒரு நபருக்கு, 1,300 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் காலை நேரத்தில் மட்டும் நடைபெறுகிறது.சமீப காலமாக, தமிழகம் மட்டுமில்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் பக்தர்கள் நேரில் வந்து பரிகார பூஜை செய்து வழிபடுகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார்.