பதிவு செய்த நாள்
29
நவ
2019
12:11
மதுரை: தென் மாவட்ட கோவில்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, மதுரை மீனாட்சி அம்மன் உட்பட முக்கிய கோவில்களில், ஆயுதம் தாங்கிய போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தென் மாவட்ட கோவில்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து, சென்னை போலீஸ் தலைமையகத்தில் இருந்து, மதுரை , ஐ.ஜி., அலுவலகத்துக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முக்கிய கோவில்களில், ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மீனாட்சி கோவிலில், ஏற்கனவே, 150 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மிரட்டலை அடுத்து, கூடுதலாக, 50 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், துணை கமிஷனர் கார்த்திக் ஆய்வு செய்தனர். வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் கோயிலில் போலீசார் குவிப்பு: மதுரை மீனாட்சி கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது என மத்திய உளவுத்துறை எச்சரித்து, பாதுகாப்பை பலப்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதன்படி வழக்கமாக கோயில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள 30 போலீசாருடன் மேலும் 50 போலீசார் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மேற்கு, கிழக்கு நுழைவு வாசலில் பக்தர்கள் தீவிர வெடிகுண்டு சோதனைக்கு பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள், என போலீசார் தெரிவித்தார். 2013 ஏப்ரலில் பயங்கரவாதிகள் அச்சுறுத்தலால் அன்று முதல் ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்து, பக்தர்களை வெடிகுண்டு சோதனையிட்டு அனுமதித்தனர்.