பதிவு செய்த நாள்
29
நவ
2019
12:11
மயிலாப்பூர்: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில், சாலையை ஆக்கிரமிப்பு வைக்கப்பட்டிருந்த கடைகளை, மாநகராட்சியினர் நேற்று அதிரடியாக அகற்றினர். மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலின், நான்கு மாடவீதிகளிலும் நடைபாதையை ஆக்கிரமித்து, ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதனால் பக்தர்கள், சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது.
கோவிலுக்கு வரும் வாகனங்களை நிறுத்த வழியின்றி, வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், வெகு துாரம் நடந்து, கோவிலுக்கு சென்று வந்தனர். கோவில் பிரதான நுழைவாயில் அமைந்துள்ள, பொன்னம்பல வாத்தியார் தெரு, 20 அடி அகலம் கொண்டது. இந்த தெருவின் இரு பக்கங்களிலும், 50க்கும் மேற்பட்ட பூ மற்றும் பூஜை பொருட்கள் விற்கும் கடைகள், 10 அடிக்கு மேல் ஆக்கிரமித்திருந்தன. கடைகளில் பணிபுரிபவர்கள், வாகனங்களை நிறுத்தி வைத்தும், பக்தர்களின் இருசக்கர வாகனங்கள் கூட, செல்ல முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், நேற்று காலை, மாநகராட்சி அதிகாரிகள், மயிலாப்பூர் உதவி கமிஷனர் நெல்சன், ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர்.