பதிவு செய்த நாள்
29
நவ
2019
01:11
நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், டிச., 25ல் ஜெயந்தி விழா கொண்டாடப்பட இருப்பதாக செயல் அலுவலர் கூறினார். நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், ஒரே கல்லினால் ஆன, 18 அடி உயர ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டில் சூரிய கிரகணம், டிச., 26ல் வருகிறது. அன்று, அமாவாசை திதியில் ஆஞ்சநேயர் பிறந்த மூல நட்சத்திரமும் வருவதாக கூறப்படுகிறது. பஞ்சாங்க கணக்குப்படி, டிச., 26 தான் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கொண்டாட வேண்டிய நாள் என்றும், சூரிய கிரகணத்தால் ஒருநாள் முன்பாக ஜெயந்தி விழா கொண்டாடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ஆஞ்சநேயர் கோவிலில் காலண்டரில் அச்சிடப்பட்டு உள்ளபடி, டிச., 25ம் தேதி அனுமன் ஜெயந்தியை கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, செயல் அலுவலர் ரமஷே் கூறியதாவது: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், அமாவாசை நாளான, டிச., 25ல் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை கொண்டாட அர்ச்சகர்கள் ஒப்புதல் அளித்து கடிதம் கொடுத்துள்ளனர். எனவே, அன்று ஜெயந்தி விழாவை, விமரிசையாக கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.