பதிவு செய்த நாள்
29
நவ
2019
01:11
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி, யாக சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன.பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியான எஸ்.எஸ்.கோவில் வீதியில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜப்பெருமாள் கோவில் உள்ளது.
கோவில் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு சில மாதங்களுக்கு முன் பாலாலயம் நடத்தப்பட்டது. வர்ணம் பூசுதல், கோவில் வளாகத்தில் கற்கள் பதித்தல் உள்ளிட்ட திருப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனை தொடர்ந்து, யாக சாலை அமைக்கும் பணிகள் நடக்கின்றன. கும்பாபிஷேக விழா வரும், 2ம் தேதி மாலை, 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி பூஜையுடன் துவங்குகிறது.வரும், 3ம் தேதி காலை, 11:30 மணிக்கு முதல் கால யாக பூஜையும், மாலை, 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும் நடக்கிறது.வரும், 4ம் தேதி காலை, 7:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, மாலை, 5:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜையும், 5ம் தேதி காலையில் ஐந்தாம் காலம் மற்றும் மாலையில் ஆறாம் கால யாக பூஜையும் நடக்கிறது.வரும், 6ம் தேதி காலை, 6:00 மணிக்கு ஏழாம் கால யாக பூஜை, காலை, 7:30 மணிக்கு கடம் புறப்பாடு, 8:00 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் மூலவர் விமானம், மூலவர் சன்னதி, பரிவார சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம், சாற்றுமுறை, தச தரிசனம் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு மகா அபிஷேகம், இரவு, 7:00 மணிக்கு கருட வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவையொட்டி பக்தி இன்னிசை கச்சேரி நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.