பதிவு செய்த நாள்
30
நவ
2019
11:11
ஆண்டிபட்டி: திருமண வரம், குழந்தை பாக்கியம் வேண்டி ஆண்டிபட்டி அருகே உள்ள புற்றுக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி கடந்த 50 ஆண்டுக்கும் மேலாக பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். ஆண்டிபட்டி சக்கம்பட்டி திருவள்ளுவர் காலனியில் உள்ளது புற்றுக்கோயில், நாகம்மாள் கோயில். கடந்த 50 ஆண்டுக்கு முன் இப்பகுதியில் உருவாக்கப்பட்ட நெசவாளர் காலனியின் ஒதுக்குப்புறமான இடத்தில் மரங்கள், செடி,கொடிகள் நிறைந்திருந்தது.
இங்கு உருவான புற்றில் பாம்புகள் அதிகம் வந்து சென்றுள்ளது. இப்பகுதி வழியாக சென்று வந்தவர்களுக்கு பயமாக இருந்தாலும், புற்று இருந்த இடத்தை பக்தர்கள் பய பக்தியுடன் வணங்கி வந்தனர். புற்றுக்கு அடியில் நாகம்மாள் அருள்பாலித்து வருவதாகவும் நம்பினர். இந்நிலையில் இப்பகுதியில் இருந்தவர்கள் நாகம்மாள் சிலையை புற்றுக்கு முன் பிரதிஷ்டை செய்து வழிபடத்துவங்கினர். சக்கம்பட்டியை சேர்ந்த மணிக்காளை, மனைவி செல்லம்மாளுடன் கோயிலில் பூஜை செய்து பராமரித்து வருகிறார். மணிக்காளை கூறியதாவது: விழாக்கமிட்டி மூலம் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 3 நாள் தபசு விழா நடத்தப்படுகிறது. பவுர்ணமி, அமாவாசை, வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் சிறப்பு வழிபாடு செய்து செல்கின்றனர். திருமணம், குழந்தை பாக்யம் வேண்டி வழிபாடு நடக்கிறது. வேண்டுதல் நிறைவேறியதும், கோயிலில் அதற்கான நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர், என்றனர்.