பதிவு செய்த நாள்
30
நவ
2019
12:11
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை (டிச.,1ல்) தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு, 63 அடி உயரமுள்ள தங்க கொடி மரம் தூய்மைப்படுத்தப்பட்டு, புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீப திருவிழா, நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை முன்னிட்டு கடந்த, 26ல், கோவில் வளாகம் மற்றும் ஒன்பது கோபுரங்களிலும், மின் விளக்குகள் பொருத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சுவாமி சன்னதி முன்புள்ள, 63 அடி உயரமுள்ள தங்க கொடி மரத்தை நேற்று, தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. கொடி மரத்தில், தங்க முலாம் பூசப்பட்டு பொருத்தியுள்ள தகடுகள் மீது, தண்ணீர் பீய்ச்சி அடித்து தூய்மைப்படுத்தப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. மேலும், கொடி மரம் அருகே உள்ள பலி பீடமும் தூய்மைப்படுத்தப்பட்டது. இதில், 25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர். டிச., 7ல், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடக்கிறது. வரும், 10ல், பரணி தீபம் மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில், அனேகன் ஏகன் (பஞ்ச பூதங்களே சிவபெருமான்) என்பதை விளக்கும் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.