தாண்டிக்குடி: இமயச்சாரலில் அமர்நாத் பனிலிங்க தரிசனம் போல் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் ஒரு சிவன் கொலுவீற்றிருக்கிறார். இங்கு சிவன் லிங்க வடிவமின்றி, சிவனாகவே காட்சியளிக்கிறார். இங்கும் சிவதரிசனத்திற்கு மலைப்பாதையேறிய பக்தர்கள் செல்வது உங்களுக்கு தெரியுமா?
கொடைக்கானலுக்கு அருகில் உள்ளது தாண்டிக்குடி. இங்கிருந்து 5 கி.மீ., தொலைவில் அரசன் கொடையில் கதவு மலைக்கோயில் அமைந்துள்ளது. பாறையை தகர்த்து அமைத்த ஒத்தை யடி பாதையில் நடந்துதான் கோயிலை அடைய முடியும். பாதையின் இருபுறமும் கதவுபோல பாறைகள் அமைந்துள்ளதால் கதவுமலைக் கோயில் என்றும், கதவுமலை நாதன் எனவும் பெயர் உண்டாயிற்று.
சுற்றிலும் மலைமுகடுகளும், ஓங்கியுயர்ந்த மரங்களும், மலைக்கிராமங்களும் கண்களுக்கு விருந்து படைக்கும். எந்நேரமும் இயற்கை அன்னை ஊற்றெடுத்து பூவானம் தூவுவது போல் மலைச்சரிவில் சில்லிடும் தூரல் இருக்கும். தொல்லியல் சின்னங்களும் பொதிந்து கிடக்கும் மலையில் இன்றும் சித்தர்கள் நடமாட்டம் உள்ளதென கிராமத்தினர் நம்புகின்றனர். அமைதி யை வேண்டி வருவோர் ஆத்ம திருப்தியுடன் திரும்பிச் செல்ல மனமின்றி தவிப்பர்.
சித்திரை மாதம் பல்வேறு பகுதியிலிருந்தும் பக்தர்கள் சங்கமிப்பார். மலைச்சரிவில், அருகிலேயே ஐநூறு அடி பள்ளத்தாக்கில் அந்தரத்தில் குகைக்கோயிலில் சுவாமியை தரிசிக்கலாம்.
அமாவாசை, பவுர்ணமி விசேஷ நாட்கள், அசத்தலான இக்கோயிலுக்கு அச்சமின்றி ஆன்மிக சுற்றுலாவாக இளைஞர்கள் சென்று வருகின்றனர். வத்தலக்குண்டில் இருந்து தாண்டிக் குடிக்கு அரைமணி நேர இடைவெளியில் பஸ் வசதியுள்ளது. மலைக்கோயிலுக்கு முதியோர் செல்ல ஜீப் வசதி உண்டு. தொடர்புக்கு: 97872 45105ல் அழைக்கலாம்.