மேட்டுப்பாளையம்: காரமடை அருகே மிகவும் பழமையான அரசு– வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
காரமடையை அடுத்த கா.புங்கம்பாளையத்தில், 12 ஆண்டுகள் ஆன பழமையான அரசு மற்றும் வேம்பு மரங்கள் உள்ளன. இந்த மரத்தை சுற்றியும் புதிதாக மேடை அமைத்து, அதில் விநாயகர் மற்றும் நந்தி சிலைகள் வைத்து பிரதிஷ்டை செய்தனர். முன்னதாக மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் அருகேவுள்ள பவானி ஆற்றிலிருந்து தீர்த்தக் குடங்களையும், முளைப்பாரிகளையும் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். நேற்று காலை மங்கல இசையுடன் விநாயகர் பூஜையுடன், விநாயகருக்கும், நந்தி மற்றும் நாகர்க்கு கலாசாபிஷேகமும் நடந்தது. அதைத் தொடர்ந்து, அதன் பின்பு சக்தி, சிவனாக விளங்கும், வேம்பு, அரச மரங்களுக்கு, வேத மந்திரங்கள் முழங்க திருக்கல்யாண வைபவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.