பதிவு செய்த நாள்
16
டிச
2019
11:12
திருவொற்றியூர்: பிரமாண்ட முருகன் சிலைக்கு நடந்த மஹா கும்பாபிஷேகத்தில், 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
திருவொற்றியூர், ஜோதி நகரில் உள்ள, பால சுப்ரமண்ய பஞ்சாயதனேஸ்வரர் கோவில், 50 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலின் வெளிப்புறத்தில், 42 அடி உயரத்தில், பிரமாண்ட முருகன் சிலை வடிவமைக்கப்பட்டது.கும்பகோணம் ஸ்தபதி உதயகுமார் தலைமையிலான குழுவினர், 55 நாட்களில் சிலையை வடிவமைத்தனர். 12 அடி பீடம், 30 அடி முருகர் சிலை என, மொத்தம், 42 அடி உயரமாகும். இதன் கூட்டுத்தொகை ஆறு. அதாவது, சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தை குறிக்கும் வகையில், சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தவிர, முருகனின் கையில் உள்ள வேல், 25 அடி உயரம் உடையது.பணிகள் முடிந்து, நேற்று காலை, மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கலசம் நிர்மாணிக்கப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது.மஹா பூர்ணாஹூதி முடிவுற்று, கலசங்கள் புறப்பாடாகின. பின், வேதமந்திரங்கள் முழங்க, பிரமாண்ட முருகன் சிலை மீது, கலச நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, பாலாபிஷேகம் நடைபெற்று, பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டது. பின், வண்ண மலர்கள் மற்றும் பொரி உள்ளிட்டவை துாவப்பட்டன. அப்போது, கூடியிருந்த, 1,000த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், முருகனுக்கு அரோகரா... என, விண்ணதிர முழங்கினர்.