பரமக்குடி: கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் பாறை நினைவாலயம் 50 வது ஆண்டு துவக்க விழாவையொட்டி, பரமக்குடி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அன்ன பூஜை விழா நடந்தது.
விவேகானந்த கேந்திரம் கன்னியாகுமரியை தலைமை இடமாகக் கொண்டு நாடு முழுவதும் ஆன்மிக சேவையை செய்து வருகிறது. இதன் மூலம் 75 பாலர் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு உணவு, கல்வி வழங்கி வருகிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 16 பள்ளிகள் இயங்குகிறது. இவர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயிலில் அன்ன பூஜை விழா நடத்தப்பட்டு, அரிசி சேகரிக்கப்பட்டது. காலை 10:00 மணிக்கு பஜனையுடன் துவங்கிய விழா, அன்னபூர்ணா ஸ்தோத்ர பாராயணம், பகவத்கீதை விஸ்வரூப தரிசன பாராயணம் பாடப்பட்டது. கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரசகோதரர் கிருஷ்ணமூர்த்தி, துாத்துக்குடி விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் அய்யப்பன் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றினர். விழா தீபாராதனையுடன் நிறைவு பெற்றது. ராமநாதபுரம் கிளை விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.