பதிவு செய்த நாள்
27
டிச
2019
11:12
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே கிராமத்தில், நேற்று சூரிய கிரகணத்தின்போது, தரையில் வைத்த தாம்பால தட்டில் நிறுத்திய உலக்கை, கீழே விழாமல் நின்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
அரிய வானிலை நிகழ்வான, வளைய சூரிய கிரகணம் நேற்று காலை, 8:10 மணிக்கு துவங்கி, பகல், 11:15 மணிக்கு முடிந்தது. 30 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த சூரிய கிரகணம் தோன்றியது. பூமி, நிலா மற்றும் சூரியன் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது இந்த கிரகணம் தோன்றுகிறது. கிருஷ்ணகிரியில், மேகமூட்டம் அதிகமாக காணப்பட்டதால், சூரிய கிரகணத்தை, காலை, 9:00 மணிக்கு பிறகே, காண முடிந்தது. வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தியதால், சிலர் கூலிங்கிளாஸ் அணிந்து பார்த்தனர். முழு கிரகணம் முடிந்த பிறகே, வானம் நீலநிறத்தில் காட்சியளித்தது. அதுவரை வானம் கரும் மேகக்கூட்டத்துடன் இருந்தது. கிருஷ்ணகிரி அடுத்த மாதேப்பட்டியில், சூரிய கிரகணத்தையொட்டி, நேற்று காலை, 8:45 மணிக்கு, கிராம மக்கள் திறந்தவெளியில் பித்தளை தாம்பாலத்தட்டை வைத்து, அதில் தண்ணீரை ஊற்றி, அதன் நடுவில் உலக்கை ஒன்றை நிற்க வைத்தனர். இந்த உலக்கை, 10:30 மணி வரை, கிரகணம் மற்றும் பூமியின் புவியீர்ப்பு விசையால், கீழே விழாமல் நின்றது. இதை பலர் ஆச்சரியத்துடன் பார்த்துச்சென்றனர்.