பதிவு செய்த நாள்
28
டிச
2019
10:12
ரெகுநாதபுரம் : ராமநாதபுரம் அருகே ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் சபரி மலையில் நடப்பது போன்று மண்டல பூஜை, ஆராட்டுவிழா, பேட்டை துள்ளல் நடந்தது. மண்டல பூஜை விழா டிச.18ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், தீபாராதனை, பூதபலி நடந்தது. மாலை பள்ளிவேட்டை புறப்பாடு நடத்தப்பட்டு, இரவு 10:00 மணிக்கு சயன பூஜைகள் நடந்தது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோ பூஜையும், பள்ளி உணர்தல் நடந்தது.அதன் பிறகு ரெகுநாத புரத்தில் இருந்த குதிரைகள் நடனமாடியவாறு முன்னே செல்ல ஐயப்ப பக்தர்கள் ஊர்வலமாக வண்ணப்பொடிகளை உடலில் பூசியவாறு பேட்டை துள்ளலுடன் ஆடிப்பாடி உற்சாகமாக வந்தனர். காலை 10:00 மணிக்கு உற்ஸவரை பல்லக்கில் கோயிலின் பின்புறமுள்ள பஸ்மக்குளம் கொண்டு சென்றனர். அங்கு சரணகோஷம் முழங்க, கருடன் வட்டமிட்டவுடன் தாம்பூலத்தட்டில் வைத்து மஞ்சள் நீரால் ஆராட்டு விழா நடந்தது. பஸ்மக்குளத்தில் புனித நீராடிய பின் மூலவருக்கு மகா அபிஷேக ஆராதனை, உலக நன்மைக்கான கூட்டுவழிபாடு நடந்தது. சன்னிதானத்தின் முன்புறம் கொடியிறக்கம் செய்யப்பட்டு, அன்னதானம் நடந்தது.ஏற்பாடுகளை தலைமை குருசாமி மோகன் சுவாமி, ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்ப சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர். புத்தாண்டில் இரவு வல்லபை ஐயப்ப பக்தர்களின் பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.