பதிவு செய்த நாள்
25
ஏப்
2012
11:04
குல தெய்வத்தை கும்பிட்டு, குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, காது குத்தி சொந்த பந்தங்களுடன், தங்கள் சொந்த மண்ணில் சிறப்பாக கோடை விடுமுறையை கழிக்க, அந்தமானில் இருந்து, 800க்கும் மேற்பட்ட தமிழர்கள், தமிழகம் திரும்பினர். கப்பல் மூலம், சென்னை துறைமுகத்தை அடைந்த அவர்கள், கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து சொந்த கிராமங்களுக்கு புறப்பட்டு சென்றனர்.மூட்டை முடிச்சுகளுடன் குடும்பம், குடும்பமாய் சொந்த கிராமங்களுக்கு திரும்பியவர்கள், எங்கு வாழ்ந்தாலும், சொந்த கிராமத்தை மறக்கக் கூடாது என, அவர்கள், உருக்கமாக கூறினர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் காத்திருந்த, பொன்னமராவதியைச் சேர்ந்த சரவணனுடன் பேசியபோது...
* அந்தமானுக்கு எப்போது சென்றீர்கள்?
தமிழகத்தில் இருந்து விவசாயம், தொழில், வியாபாரம் உள்ளிட்ட விஷயங்களுக்காக, பல தலைமுறையாக, தமிழர்கள், அந்தமானுக்கு வந்து செல்கின்றனர். இந்த தலைமுறையில், தமிழகம் திரும்பிய எங்களில் பெரும்பாலானோர், அந்தமானை பூர்வீகமாக கொண்டவர்கள். எங்கள் தாத்தா காலத்தில் இருந்தே, அந்தமானை பூர்வீகமாக கொண்டு வாழ்ந்து வருகிறோம்.
* அந்தமானில் என்ன தொழில் செய்கிறீர்கள்?
தமிழர்களில் பலர், விவசாய தோட்டம் வைத்துள்ளனர். கட்டடப் பணி, வாகனம் தொடர்பான பணியில் தமிழர்கள் அதிகளவில் உள்ளனர். ஆந்திரா மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து, அந்தமான் வருபவர்களில் அதிகம் பேர், கூலித் தொழிலாளிகளாக உள்ளனர்.
* தமிழகத்தில் இருந்து யார் அதிகளவில் அங்கு தங்கியிருக்கின்றனர்?
தமிழகத்தின் தென் மாவட்ட பகுதிகளான மதுரை, அருப்புக்கோட்டை, கீழக்கரை, பொன்னமராவதி, ராமேஸ்வரம், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள், அதிகளவில் தங்கியுள்ளனர்.
* அந்தமான் வாழ்க்கை எப்படி?
தமிழகத்தை விட, அந்தமானில் நிம்மதியாக உள்ளது. அங்கு போக்குவரத்து வசதி குறைவு. அதனால், பெற்றோரை பிரிந்து, வெகு தூரம் கடந்து தங்கி வேலை பார்ப்பவர்கள் குறைவு. இதனால், எல்லாரும் ஒருவரையொருவர் பிரியாமல் குடும்பமாய் வசிக்கிறோம்.
* சுனாமி வந்த போது என்ன செய்தீர்கள்?
தமிழர்கள் பலர், அச்சமடைந்திருந்தோம். சுனாமி வந்த பின், தமிழகத்தில் இருந்து வேலைக்காக அந்தமான் வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.
* தமிழகத்துக்கு திரும்பி விடலாம் என்ற எண்ணம் வந்ததா?
இறப்பு என்பது எப்படி வேணுமானாலும் நிகழலாம். நாங்கள், அந்தமானில் பிறந்து, அங்கேயே வாழ்ந்து வருபவர்கள். எது நிகழ்ந்தாலும் அந்தமானில் வாழும் வாழ்க்கையையே சிறப்பாக கருதுகிறோம். அந்தமானில் உள்ள வாழ்க்கை முறையை அங்கு வந்து உணர்ந்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
* திடீரென குடும்பம், குடும்பமாய் வந்துள்ளீர்களே...
அந்தமானில் வாழ்ந்தாலும், எங்களது உறவினர்கள் அனைவரும் தமிழகத்தில் தான் இருக்கின்றனர். எங்களது மூதாதையர் வாழ்ந்த சொந்த கிராமத்தை மறக்க முடியாது. தற்போது குழந்தைகளுக்கு கோடை விடுமுறை விட்டாச்சு. விடுமுறையை சொந்த பந்தங்களுடன் கழிக்க, தமிழகம் திரும்பியுள்ளோம். உறவினர்களை ஆண்டுக்கு ஒருமுறை சென்று பார்த்து விட வேண்டும். எங்களது குல தெய்வம் கோவில் இங்கு தான் இருக்கிறது. ஆகையால், குல தெய்வ கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு, குழந்தைகளுக்கு மொட்டை அடித்து, காது குத்த வேண்டும். தற்போது, கிராம கோவில்களில் திருவிழாக்கள் துவங்கிய வண்ணம் உள்ளதால், இந்த கோடை மாதம் முழுவதும் குதூகலமாகத்தான் இருக்கும்.
* கடந்த கோடைக்கு வந்து சென்றீர்களா?
ஆம்! காரணம், நமது கலாசார, பழக்க வழக்கங்களை அடுத்தடுத்த தலைமுறையினருக்கு நாம் கொண்டு செல்ல, இது போன்ற பயணம் தானே எங்களுக்கு உதவுகிறது. வரும் ஆண்டுகளிலும் கோடையில் சொந்த கிராமங்களுக்கு வருவோம்.
இவ்வாறு சரவணன் கூறினார்.இவர், அந்தமானில் ஓட்டுனராக வேலை செய்கிறார்.