பதிவு செய்த நாள்
11
ஜன
2020
11:01
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசனவிழாவில் நடராஜர் – சிவகாம சுந்தரி நடன மாடிய படி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாள் விழாவில் தினமும் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இரவு நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன் மேல தாளம் முழங்கிட, தே ரிலிருந்து இறங்கி ஆயிரங்கால் மண்டப முகப்பில் எழுந்தருளினர். விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. அதிகாலை 3:00 மணி முதல் 6:00 மணி வரை ஆயிரங்கால் மண்டப முகப்பில், சிவகாமசுந்தரி, நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. காலை 10:00 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி திருவாபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பஞ்சமூர்த்திகள் வீதியுலா முடிந்த பின், மாலை 5:00 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மேலதாளங்கள் முழங்கிட, வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓதிட நடராஜர், சிவகாமசுந்தரி நடனமாடிய படி பக்தர்களுக்கு காட்சி அளித்து சித்சபைக்கு சென்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அய்யப்ப சேவா சங்கம் சார்பில், 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட தலைவர் யாகமூர்த்தி சுவாமிகள், கணேசன் மற்றும் சேவாசங்க தொண்டர்கள் பங்கேற்றனர். பல்வேறு அமைப்புகள் சார்பில், அன்னதானம் செய்யப்பட்டது. சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி, வெளி மாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். மாவட்ட எஸ்.பி., அபிநவ் தலைமையில் சிதம்பரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டாகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (11ம் தேதி) இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலா உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.