பதிவு செய்த நாள்
23
ஜன
2020
03:01
திருக்கடவூர் ஆயுளை அதிகரிக்கும் புண்ணிய தலம். சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம், ஆண்டு நிறைவு, மணநாள் என்று மக்கள் ஹோம ஆராதனைகள் செய்து மகிழும் தலம். இத்தல சிவபெருமானுக்கு காலாந்தக மூர்த்தி, கால சம்ஹார மூர்த்தி என்று பெயர். அதாவது தன் பக்தன் மார்க்கண்டேயனுக்காக எமனை வதைத்தவர். இவருக்கு அமிர்தகடேஸ்வரர் என்னும் பெயரும் உண்டு. 16 வயதே ஆயுள் என்று விதிக்கப்பட்ட மார்க்கண்டேயனுக்கு என்றும் 16 என்று வரமருளியவரல்லவா? இங்குள்ள பிள்ளையாருக்கு கள்ள விநாயகர் என்று பெயர். கண்ணனுக்குத்தான் வெண்ணெய் திருடியவன், கோபியர் ஆடை திருடியவன், உள்ளம் திருடியவன், ருக்மினியைத் திருடியவன் என்றெல்லாம் பெயர்கள் உண்டு. விநாயகருக்கு ஏன் இந்தப் பெயர்?
பாற்கடலைக் கடைந்து பெற்ற அமுதத்தை தேவர்கள் ஆனந்தமாய் ஓரிடத்தில் வைத்தனர். அது திடீரென்று மறைந்தது. பதறிய தேவர்கள் ஆலகால விஷம் உண்ட சிவபெருமானை வேண்ட, நீங்கள் கணபதியை வழிபடத் தவறிவிட்டீர்கள். அதனால் அமிர்தத்தை மறைத்து வைத்துவிட்டார். அவரை வணங்குங்கள். அமிர்தம் கிடைக்கும் என்றார்.
அந்த விநயாகர்மீது அபிராமிபட்டர் பாடிய துதி:
துதியேன் எனினும் தொழுகேன்
எனினும் உன் தொண்டர்தமை
மதியேன் எனினும் வணங்கேன்
எனினும் வலிய வந்து
கதியே தரும் வழிகாட்டிடுவாய் நின்
கருணையினால்
விதியேபுகழ் கடவூர் வாழும் கள்ள
விநாயகனே.
எனவே இந்த கள்ள விநாயகரை, அமிர்தகடேஸ்வரரை, காலசம்ஹார மூர்த்தியை மனமார வணங்கினால் நீண்ட ஆயுளுடன் வாழலாம் என்பது தத்துவம். இத்தலத்திலுள்ள அபிராமி அன்னை மிகுந்த வரப்பிரசாதி. தை மாத அமாவாசை நாளில் இந்த அம்மன் சன்னிதியில் விசேடமான ஆராதனைகள் நடக்கும். அது ஏன்? சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் இத்தலத்தில் வாழ்ந்தவர் அபிராமி பட்டர். அன்னைமீது அளவற்ற பக்திகொண்டவர். ஒரு சமயம் அன்னையை தரிசிக்கவந்தார் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர். அப்போது அனைவரும் மன்னருக்கு மரியாதை செய்ய, அன்னையின் தியானத்திலிருந்த பட்டர் கவனியாமல் இருந்தார். இதைக் கண்ட மன்னர் மற்றவர்களிடம் விவரம் கேட்க, அவர் ஒரு உன்மத்தர் என்று சொன்னார்கள். அதைக்கேட்ட சரபோஜி மன்னர் பட்டரிடம் சென்று, இன்று என்ன திதி என்று கேட்க, அம்பிகையின் சவுந்தர்யப் பேரொளியில் மூழ்கியிருந்த பட்டர் பவுர்ணமி என்றார். அன்றைய தினமோ தை அமாவாசை.
அப்படியா... இன்று முழு நிலவு தெரியுமா? என்று கேட்டார் மன்னர்.
தெரியுமே. அதிலென்ன சந்தேகம்? என்றார் பட்டர். நீர் சொன்னபடி இன்றிரவு முழுநிலவு தெரியாவிட்டால் சிரச்சேதம் செய்யப்படுவாய் என்று சொல்லிவிட்டு அகன்றார் மன்னர். சிறிது நேரம் கழித்து பட்டருக்கு சுயநினைவு வந்தது. அவரது நண்பர் நடந்த நிகழ்வுகளை அவரிடம் கூற, நான் சுயநினைவில் கூறவில்லை எல்லாம் அம்பாள் விருப்பம் என்றார் பட்டர். அன்றிரவு அம்பிகையை நினைத்து உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் என்று தொடங்கும் அந்தாதிப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார். 69-ஆவது பாடலான-
தனம்தரும் கல்விதரும்
ஒருநாளும் தளர்வறியா
மனம்தரும் தெய்வவடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லன எல்லாம் தரும்
அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள்
அபிராமி கடைக்கண்களே
என்னும் பாடலைப் பாடி முடித்தபோது, அபிராமி மனம் மகிழ்ந்து தனது காதணியை(தாடங்கம்) வானில் வீசினாள். அது பவுர்ணமியாக ஒளிர்ந்தது. ஆக, அமாவாசை நாள் அம்பிகை அருளால் ஒளிபெற்றது. அனைவரும் வியந்து நிற்க, அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கேட்ட சரபோஜி மன்னர் மேலும் பாடச்சொன்னார். அதற்கிணங்க அபிராமி அந்தாதியை நூறு பாக்களாகப் பாடி நிறைவு செய்தார் பட்டர். பெரிதும் மகிழ்ந்த மன்னர் அபிராமி பட்டருக்கு நிறைய கொடைகளை வழங்கினார். அதற்கான பட்டயம், அவரது சந்ததிகளிடம் இன்றும் உள்ளது.
அதன் விவரம்:
சீர்பெறு ஸகாப்தம்ஓர் ஆயிரத் தறுநூறு
சேரு(ம்)முப் பான் ஒன்றின் மேல்
திகழ்தரு விரோதிவரு ஷத்தினிற் சித்திரைத்
திங்கள்பதி னேழ்கதி யில்
பார்புகழ் வியாழன்நாள் துதியைஅநு
ஷம்பூர்வ
பக்ஷநல்ஸுபதிநத் தில்
பஞ்சலட் சணவர் அபி ராமிபட் டர்க்கரசர்
பட்டோலை இட்ட விபரம்
கார்பரவு கடவைநாற் பதுகலம் பதினாறு
கணித(ம்)மூ வைந்தொர் ஆக்கூர்
கவின்நாற் பதின்கலம்ஓர் நல்லாடை
திருவிடைக்
கழிகலம் பதினைந்து மாம்
ஏர்பெருகு செம்பொன்செய் பள்ளிஇரு
பான்கலம்
என்போஜ மஹராஜர் போன்ம்
எங்கள்ஸர போஜிமனன் மகமையுடன்
விபரமாய்
எந்நாளும் அருளும் வகையே.
ஆதாரம்: திருக்கடவூர்ப் பிரபந்தத் திரட்டு.
இந்நிகழ்ச்சியை அடுத்தே தை அமாவாசை தினம் அபிராமி கோயிலில் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். அன்பர்கள் அந்தாதி பாட, கொடிமரத்தில் விளக்குகள் ஏற்றி ஜோதிமயமாக தரிசிப்பார்கள். தை அமாவாசை முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய உகந்த நாள். அம்பிகை ஆராதனைக்கும் ஏற்றதே. அந்த நாளில் அபிராமியை வணங்கி அவளருள் பெறுவோம்.