பதிவு செய்த நாள்
27
ஜன
2020
10:01
:சென்னிமலை: சென்னிமலை மலை மீதுள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் தைப்பூச தேர்திருவிழா கோலாகலமாக நடக்கிறது.
நடப்பாண்டு விழாவில் வரும், 30ல் காலை கணபதி ஹோமம், கிராமசாந்தி நடக்கிறது. 31ம் தேதி மதியம், 12:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. பிப்.,1ம் தேதி இரவு பல்லக்கு சேவை நடக்கிறது. 2ம் தேதி இரவு, 8:00 மணிக்கு, மயில் வாகனக்காட்சி, 4ம் தேதி இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளிமயில் வாகனக்காட்சி நடக்கிறது. 5ம் தேதி இரவு யானை வாகனத்தில் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை திருவீதி உலா நடக்கிறது. 6ம் தேதி மாலை, 6:00 மணிக்கு கைலயங்கிரி வாகனக்காட்சி, இரவு, 8:00 மணிக்கு காமதேனு வாகனக்காட்சி நடக்கிறது. 7ம்தேதி மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8:00 மணிக்கு வள்ளி, தெய்வானை சமதே முத்துகுமாரசாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
தேரோட்டம்: பிப்.,8ம் தேதி சனிக்கிழமை அதிகாலை, 3:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. காலை, 7:00 மணிக்குள் தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். 9ம் தேதி மாலை, தேர் நிலை வந்தடைகிறது. 10ம் தேதி இரவு, 7:00 மணிக்கு பரிவேட்டை குதிரை வாகனக்காட்சி, 11 ம் தேதி இரவு தெப்போற்சவம், பூத வாகன காட்சி நடக்கிறது.
மகாதரிசனம்: பிப்.,12ம் தேதி காலை, 9:00 மணி முதல், 12:00 மணி வரை, வள்ளி தெய்வானை சமேத, முத்து குமாரசாமிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. இரவு, 8:00 மணிக்கு மகாதரிசனம் நடக்கிறது. இதில் நடராஜ பெருமான் வெள்ளி விமானத்திலும், சுப்ர மணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வெள்ளிமயில் வாகனத்திலும் திருவீதி உலா, அதிகாலை வரை நடக்கிறது. இந்நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். பிப்., 26ல் மஞ்சள் நீர் அபிஷேகத்துடன், 15 நாள் தைப்பூச தேர் பெருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தக்கார் நந்தகுமார், கோவில் செயல் அலுவலர் அருள்குமார், அலுவலர்கள், அர்ச்சகர்கள் செய்கின்றனர்.