அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம்: பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஏப் 2026 03:04
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்த தேரை பக்தர்கள் வடம் பிடித்தனர்.
கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரைத்தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் பிரம்மாண்ட தேரில் எழுந்தருள, அரோகரா, நமசிவாய முழக்கங்கள் விண்ணைப் பிளக்க பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். நாளை தேர்நிலையில் இருந்து வடம் பிடிக்கப்படும் தேர், மேற்கு மற்றும் வடக்கு ரத வீதி சந்திப்பில் நிறுத்தப்படும். கூட்ட நெரிசலைத் தவிர்க்க டி.எஸ்.பி. கனகசபாபதி தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். வெயிலின் தாக்கத்தைக் குறைக்க ரத வீதிகளில் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் தெளிக்கப்பட்டது. தேரோட்ட நிகழ்ச்சிகள் நாளை (29ம் தேதி): பெரிய தேர் நிலை சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை மறுநாள் (30ம் தேதி): அம்மன் தேர் மற்றும் சுப்ரமணியர், பெருமாள், சண்டிகேஸ்வரர் தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளன. மே 1: பரிவேட்டை, மே 2: இரவு தெப்பத்தேர் உற்சவம், மே 3: நடராஜப் பெருமான் தரிசனம்,கொடியிறக்கம், மே 4: மஞ்சள் நீர், மயில் வாகனக் காட்சியுடன்தேர்த்திருவிழா நிறைவு பெறுகிறது.