திருமால் எடுத்த அவதாரங்களில் உக்ரம் மிகுந்த அவதாரம் நரசிம்மம். நரன் என்றால் மனிதன். சிம்மம் என்றால் சிங்கம். இந்த இரண்டும் சேர்ந்த வடிவம் இது. பக்தியில் சிறந்த பிரகலாதனுக்காக பெருமாள் இந்த அவதாரத்தை எடுத்தார். எங்கேயடா உன் ஹரி? என்று தந்தையான இரணியன், தன் மகன் பிரகலாதனை துன்புறுத்தினான். அதற்கு பிரகலாதன், அவர் தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்று பதிலளித்தான். பிரகலாதனின் வாக்கை உண்மையாக்க மின்னல் வேகத்தில் தூணில் எழுந்தருளி இரண்யனை அழித்தார் திருமால். ஹரி என்ற சொல்லுக்கு கடவுள் என்றும், சிங்கம் என்றும் பொருள் உண்டு. பிரகலாதனைக் கண்டதும் கோபம் தணிந்து சாந்த மூர்த்தியானார். கோயில்களில் நரசிம்மர் இருநிலைகளில் காட்சி தருகிறார். தனித்த நிலையில் யோக நரசிம்மராகவும், சாந்த நிலையில் திருமகளை அணைத்தபடி, லட்சுமி நரசிம்மராகவும் அருள்பாலிக்கிறார். நாளை என்பது நரசிம்மனிடத்தில் இல்லை என்னும் வாக்கிற்கு ஏற்ப, எப்பாடு பட்டேனும் சரணடைந்த உடனேயே அருள்பாலிப்பவர் என்றால் மிகையில்லை.