பதிவு செய்த நாள்
03
பிப்
2020
10:02
தஞ்சாவூர்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவில், போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம், 23 ஆண்டுகளுக்கு பின், 5ம் தேதி நடக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்காக, கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் நெரிசலில் சிக்காமல், கும்பாபிஷேகத்தை காண வசதியாக, கோவில் வளாகத்திற்குள், 13 இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப் பட்டுள்ளன. பெரிய கோவிலில் உள்ள மராட்டா கோபுரம், கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன் கோபுரம், திருச்சுற்று மாளிகை, கோவில் சுற்றுப்பிரகாரம் என, கோவில் முழுவதையும் கண்காணிக்கும் வகையில், 32 இடங்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது தவிர, நகரப் பகுதியில், 160 இடங்களிலும், நகரத்தின் வெளியே, பைபாஸ் சாலையில், 100க்கும் மேற்பட்ட இடங்களிலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமரா காட்சிகளை கண்காணிப்பதற்காக, பெரிய கோவில் எதிரே, நவீன கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்களையும், அவர்களின் உடைமைகளையும் சோதனை செய்ய, ராஜராஜன் கோபுரம், மராட்டா கோபுரம், சிவகங்கை பூங்கா முன்பகுதி போன்ற இடங்களில், மெட்டல் டிடெக்டர் கருவி வைக்கப்பட்டுள்ளது. தற்போது, பெரிய கோவில் முழுவதையும், போலீசார் தங்களது பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் குழுவினர், பெரிய கோவிலில் முழுவதையும் அடிக்கடி சோதனை செய்து வருகின்றனர். பாதுகாப்புப் பணியில், 4,492 போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 17 இடங்களில், காவல் உதவி மையங்களும், 55 இடங்களில், தகவல் அறிவிப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் நவீன சாதனங்கள் மூலம், நெரிசலை கண்காணித்து நெறிப்படுத்துவதற்கான பணிகளை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் புலப் பேராசிரியர் ராஜன் தலைமையில், 12 மாணவர்கள் மேற்கொண்டுள்ளனர். இதற்காக, ராஜராஜன் வாயில், திருச்சுற்று மாளிகை உட்பட, 12 இடங்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இது குறித்து, பேராசிரியர் ராஜன் கூறியதாவது;இந்த மென்பொருள் உதவியுடன், கோவிலுக்குள் வரும் பக்தர்கள் மீது, சென்சார் ஒளி ஏற்படுத்தி, அவர்கள் வெளியே செல்லும் வரை கண்காணிக்க முடியும். கோவிலுக்குள் இருப்போர், வெளியே செல்பவர்கள் பற்றி அறிந்து கொள்ள முடியும். இதனால், கோவிலுக்குள், எப்போது, எவ்வளவு பேரை அனுமதிக்கலாம் என்பதை போலீசாருக்கு தெரியப்படுத்த முடியும். கோவிலுக்குள் ஒரே நேரத்தில், எவ்வளவு பேர் நிற்கலாம் என்பது கணக்கிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, அதில், 75 சதவீதம் வரை அனுமதிக்கப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள குற்றவாளிகளின் பட்டியல், இந்த மென்பொருளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள், கோவிலுக்குள் வந்தால், உடனே கண்டுபிடிக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.
மருத்துவ குழு: பக்தர்களின் வசதிக்காக, ஐந்து, பைக் ஆம்புலன்ஸ்கள், 16, ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஏழு அதிநவீன ஆம்புலன்ஸ்கள், ஆறு மருத்துவ மையங்கள், 26 நடமாடும் மருத்துவக் குழு தயார் நிலையில் உள்ளன. ராஜா மிராசுதார், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 40 படுக்கைகள் உடைய சிறப்பு வார்டுகளில், மருந்துகள், மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். தனியார் மருத்துவமனைகளிலும், சிறப்பு வார்டுகள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.