பதிவு செய்த நாள்
06
பிப்
2020
10:02
தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் கும்பாபிஷேகம், நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. காலை, 9:23 மணிக்கு கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது, கூடியிருந்த பக்தர்கள், ஓம் நமசிவாய என, பக்தி பரவசத்தில் விண்ணதிர கோஷமிட்டனர்.
உலகப் புகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரிய கோவிலில், கும்பாபிஷேக விழாவை நடத்த வேண்டும் என, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, மூன்று மாதங்களுக்கு முன், கோவில் கும்பாபிஷேகம், பிப்., 5ல், நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் துவங்கியது. டிச., 2ல், திருப்பணிகளுக்கான பாலாலயம் செய்யப்பட்டது. ஜன., 5ல், கோவில் விமான கோபுர கலசம் இறக்கப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டு, 30ம் தேதி, மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
குடங்கள் புறப்பாடு: அதேபோல், 17 ஆண்டுகளுக்கு பின், பழைய கொடிமரம் இறக்கப்பட்டு, புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கும்பாபிஷேக விழா, 27ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் துவங்கியது. 31ம் தேதி, வெண்ணாற்றிலிருந்து புனித நீர், ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பிப்ரவரி, 1ம் தேதி மாலை, முதலாம் கால யாகசாலை பூஜை துவங்கியது. தொடர்ந்து, நேற்று காலை வரை, எட்டு கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழா நாளான, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, எட்டாவது கால யாக பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்ஹாஹூதி பூஜைகள் நடைபெற்றன. காலை, 7:20 மணிக்கு, யாகசாலை மண்டபத்திலிருந்து மங்களவாத்தியம், சிவ வாத்திய கருவிகள் இசைக்க, கங்கை, யமுனை, காவிரி உட்பட,புனித நீர் அடங்கிய குடங்கள் புறப்பாடு நடைபெற்றது.
மஹா தீபாரதனை: தொடர்ந்து, 27 சன்னிதி கோபுர கலசங்களுக்கும் குடம் புறப்பட்டு, கோவிலை வலம் வந்து, ஒவ்வொரு சன்னதியாக சென்று, அதன் கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் சென்றனர். பெரியகோவிலின், 216 அடி உயரமுள்ள விமான கோபுர கலசத்துக்கு, ஐந்து சிவாச்சாரியார்கள், இரண்டு ஓதுவார்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் ஏறினர். கோவில் கோபுரத்தில் சிவாச்சாரியார்கள், சமஸ்கிருதத்திலும்; ஓதுவார்கள், தமிழிலும் மந்திரங்களை உச்சரித்தனர். நடராஜர்மண்டபத்திலும் ஓதுவார்களும், சிவாச்சாரியார்களும், இரு மொழியிலும் மாறி மாறிமந்திரங்களை உச்சரித்தனர். காலை, 9:23 மணிக்கு, விமான கோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அங்கிருந்து, பச்சைகொடி அசைக்கப்பட்டதும், இதர கோபுரங்களிலும் புனிதநீர் ஊற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, மஹா தீபாரதனை நடைபெற்றது. நேற்று காலை, 10:00 மணியிலிருந்து, இரவு வரை இடைவிடாது, மூலவரான பெருவுடையாரை, ஏராளமான பொதுமக்கள் தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவே, சில பக்தர்கள், கோவிலுக்கு வந்து, திருச்சுற்றுமாளிகையில் தங்கினர். நேற்று அதிகாலை, 2:00 மணி முதல், பக்தர்கள் வருகை தந்தனர். பொது தரிசனத்துக்காக, கோவிலின் தென்புறத்தில், ஏழு அடைப்புகள் இருந்தன. இவை அனைத்தும் நிரம்பியதும், கோவிலின் வெளிப்பிரகாரத்தில், பொதுமக்களை அனுமதித்தனர். அங்கும் பக்தர்கள் நிறைந்தனர்.
ஐந்து லட்சம் பேர்: காலை, 7:00 மணிக்கு பின், கோவிலுக்குள், பொது தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பொதுமக்கள், கோவிலை சுற்றியுள்ள சாலையிலிருந்து, கும்பாபிஷேகத்தை காண வசதிக்காக, இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள், கோவிலுக்கு வெளியில் இருந்தபடியே, கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். தஞ்சாவூர் பெரிய கோவிலில் கும்பாபிஷேகத்தில், 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு, வி.வி.ஐ.பி., களுக்கான அடையாள அனுமதி அட்டைகள் வழங்கப்பட்டிருந்தன. அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பா.ஜ.,வின் மூத்த தலைவர் இல.கணேசன், தேசிய செயலர், எச்.ராஜா உட்பட பலர், விழாவில் பங்கேற்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகள், சிறப்பாக செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு பணியில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கும், முதியோருக்கும், தன்னார்வ இளைஞர்கள் பலரும் உதவி செய்தனர். நெரிசலை ஒழுங்குப்படுத்தும் பணியில், போலீசாருடன் இணைந்து தன்னார்வலர்கள் பலரும் ஈடுபட்டிருந்தனர். விழா முடிந்ததும், கோவிலுக்குள் சென்று தரிசனம் செய்ய, பல்லாயிரக்கணக்கானோர் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். இவர்களை, போலீசார் முறைப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
கும்பாபிஷேகத்தில், ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று, பெருவுடையாரை தரிசனம் செய்தனர். நேற்று மாலை, 6:00 மணிக்கு, பெரியநாயகி மற்றும் பெருவுடையாருக்கு பேரபிஷேகம், இரவு, 8:00 மணிக்கு, பஞ்சமூர்த்தி திருவீதி உலாவும் நடந்தது. சிவ வாத்திய இசை தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து, 70க்கும் மேற்பட்ட சிவவாத்திய இசைக்கலைஞர்கள், நந்தி மண்டபம், மடப்பள்ளி, வராஹி அம்மன் சன்னதி ஆகிய இடங்களில் சங்கு, திருச்சின்னம், தந்தகொம்பு, எக்காளம், பிரம்மதானம், உடுக்கை ஆகியவற்றை இசைத்து, பக்தி பரவசத்தில் ஆடினர். அதிகாலை முதல் விமான கோபுரத்தில் புனித நீர் ஊற்றியது வரை, இடைவிடாமல் இசைத்தபடியே இருந்தனர். அவர்கள் மீது, அவ்வப்போது பக்தர்கள் பூக்களை துாவினர். இந்த இசைக்கு ஏற்ப பக்தர்களும், அகோரிகளும் நடனம் ஆடி, பக்தர்களுக்கு உற்சாகம் அளித்தனர்.
ஸ்பிரிங்கலர்: விமான கோபுரம் உட்பட அனைத்து கோபுரங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்ட நேரத்தில், கோவிலின் தென்புறத்தில், ஸ்பிரிங்கலர் குழாய் வழியாக, பக்தர் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
10 டன் மலர் மாலைகள் தயாரிப்பு: தஞ்சை பெரிய கோவிலில் கும்பாபிஷேக விழாவையொட்டி, சுவாமி, கோபுரங்கள், யாக சாலைகளுக்கு பயன்படுத்த, நாள்தோறும் ஸ்ரீரங்கம், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய இடங்களிலிருந்து, 1,500 கிலோ செவ்வந்தி, ரோஜா, வாடாமல்லி, சம்மங்கி பூக்கள் வரவழைக்கப்பட்டன. தருமபுரம் ஆதீனத்திலிருந்து, 75 பேர் வந்து, இந்த பூக்களை, மாலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், கும்பாபிஷேக விழாவான நேற்று, விமானத்தின் மேல் பகுதி முழுவதும், மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதே போல், கோவில் கோபுரத்தில், தலா, 150 அடி நீளத்துக்கு, இருபுறமும் மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
பெரியநாயகி அம்மன் கோவில் தாழ்வாரம், சந்தி பெருமான், மூலவர் சன்னதி உட்பட, கோவிலின் பல இடங்களில், மலர் மாலைகள் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மதுரை கஜானன் மகராஜ் பக்தர்கள் பேரவை சார்பில், தாமரை மொட்டுகள், மனோரஞ்சிதம், செந்தாமரை, வெண்தாமரை ஆகிய பூக்களால், மாலை தொடுக்கப்பட்டு, பெருவுடையார், பெரியநாயகி அம்மன், மாமன்னன் ராஜராஜசோழன் சிலை ஆகியவற்றுக்கு, மாலை அணிவிக்கப்பட்டது. இவ்வாறாக, 10 டன் மலர்களால், மாலைகள் தொடுக்கப்பட்டு, கும்பாபிஷேகத்துக்கு அணிவிக்கப்பட்டதாக, பெரியகோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.