பதிவு செய்த நாள்
04
பிப்
2020
01:02
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக, 300 அடி உயர ஏணியுடன் கூடிய, அதிநவீன ஹைட்ராலிக் பிளாட்பார்ம் தீயணைப்பு வாகனம், முதன்முறையாக வரவழைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் பெரியகோவில் கும்பாபிஷேக விழா, நாளை (பிப்.,5ல்) நடைபெறவுள்ளது. இதற்காக பெரியகோவில் பின்புறம், 11,900 சதுரஅடி பரப்பளவில் யாகசாலை மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. யாகசாலை பந்தலில் 8 இடங்களில் தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கக்கூடிய உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். மேலும், யாகசாலை பந்தல் அருகே சிவகங்கை பூங்கா வளாகத்தில் தீயணைப்புத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 2 தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுழல் மேஜையுடன் கூடிய ஏணியை கொண்ட அதிநவீன வாகனம் சென்னையில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டுள்ளது. ஹைட்ராலிக் பிளாட்பார்ம் என்று அழைக்கப்படும் வாகனம் நீரியியல் அழுத்தத்தில் செயல்படக்கூடியது. தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்காக பின்லாந்து நாட்டிலிருந்து 17 கோடி ரூபாய் மதிப்பில் இந்த வாகனம் வாங்கப்பட்டுள்ளது. முதன்முறையாக திருச்சி மண்டலத்திற்கு இந்த வாகனம் கொண்டு வரப்பட்டு பெரியகோயில் வளாகத்தில் மூலவர் விமான கோபுரத்தின் பின்புறம் கருவூரார் சன்னதி முன் நிறுத்தப்பட்டுள்ளது. மூலவர் விமான கோபுரம் 216 அடி உயரம் கொண்டது. குடமுழுக்கின் போது மூலவர் கோபுரத்தில் சிவாச்சாரியார்கள், ஓதுவார்களுடன் தீயணைப்பு வீரரும் செல்லவுள்ளனர். இவர்களுக்கு ஏதாவது மயக்கமோ அல்லது வேறு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் இரும்புகளால் ஆன படிக்கட்டுகளின் வழியாக கீழே கொண்டு வர சிரமம் ஏற்படும். அப்படி ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களை சுழல் மேஜையுடன் கூடிய ஏணியின் உதவியுடன் கீழே கொண்டு வரப்படுவார்கள்.
இதுகுறித்து திருச்சி மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை துணை இயக்குநர் மீனாட்சி விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது; சுழல் மேஜையுடன் கூடிய ஏணியின் மூலம் 104 மீட்டர் நேராகவும், 55 மீட்டர் பக்கவாட்டிலும் செல்ல முடியும். அதாவது 300 அடி உயரம் வரை செல்ல முடியும். மூலவர் கோபுரத்தின் உயரம் 215 அடி உயரம் என்பதால் இந்த வாகனத்தை தேர்வு செய்தோம். தண்ணீர் பீய்ச்சி அடிக்கக்கூடிய வசதியும் உள்ளது. இதனால் ஏதாவது திடீரென தீ விபத்து ஏற்பட்டால் கூட அணைக்க முடியும். உயிரை காக்கவும், தீயை அணைக்கவும் இந்த வாகனம் பயன்படுத்தப்படும். யாகசாலையில் தான் திரி, எண்ணெய் இருக்கும். தீ பற்றாமல் இருக்கக்கூடிய வர்ணம் பூசப்பட்டுள்ளது. சிவகங்கை பூங்கா குளத்தில் தண்ணீர் எடுப்பதற்காக மின்மோட்டார் பொருத்தியுள்ளோம் என்றார்.