பதிவு செய்த நாள்
05
பிப்
2020
10:02
தஞ்சை: ஆயிரக்கணக்கான பக்தர்களின் "ஓம் நவச்சிவாய" கோஷம் விண்ணை பிளக்க, தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடந்தது.
தஞ்சாவூர் பெரியகோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த விழா ஜன. 27}ம் தேதி யஜமான அனுக்ஞை வைபவத்துடன் தொடங்கப்பட்டது. இதையடுத்து, முதல் கால யாக பூஜைகள் பிப். 1-ம் தேதி மாலை தொடங்கியது. தொடர்ந்து, பிப். 2-ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகளும், பிப். 3-ம் தேதி காலை நான்காம் கால யாக பூஜைகளும், மாலையில் ஐந்தாம் கால யாக பூஜைகளும், செவ்வாய்க்கிழமை (பிப்.4) காலை ஆறாம் கால யாக பூஜைகளும், மாலையில் ஏழாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன.
இதைத்தொடர்ந்து, இன்று (பிப்.5) அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாகம் உள்ளிட்ட பூஜைகளும், காலை 7 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் ஆகியவையும் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கும், 10 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையார் மற்றும் அனைத்து மூலவர்களுக்கு குடமுழுக்கும், மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல் ஆகியவை நடைபெற்றன. இதில், கோயில் உள் பிரகாரத்தில் கிட்டத்தட்ட 10,000 பேரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இதேபோல, வெளி பிரகாரம், கிரிவலப் பாதை, மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் பல்லாயிரக்கணக்கானோர் நின்று தரிசனம் செய்தனர். மேலும், சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் தங்களது வீட்டு மாடியில் ஏறி நின்று கண்டுகளித்தனர். மாநகரில் ஏறத்தாழ 5,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மாலை 6 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேரபிஷேகம், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருவீதியுலா காட்சியருளல் ஆகியவை நடைபெறவுள்ளன.