பதிவு செய்த நாள்
09
ஏப்
2020
10:04
திருப்பதி : கொரோனா தொற்றிலிருந்து ஊழியர்களை காப்பாற்ற, ஐந்து விதமான ஆயுர்வேத மருந்துகளை, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்துள்ளது.
நாடு முழுவதும், கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம், புதிதாக, ஐந்து விதமான ஆயுர்வேத மருந்துகளை தயாரித்து வருகிறது.தேவஸ்தானத்திற்கு சொந்தமான, எஸ்.வி. ஆயுர்வேத கல்லுாரி, எஸ்.வி. ஆயுர்வேத மருத்துவமனை, எஸ்.வி. ஆயுர்வேத மருந்தகம் உள்ளிட்டவற்றின் உதவியுடன், ஐந்து விதமான மருந்துகளை, தேவஸ்தானம் தயார் செய்துள்ளது.உலக ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை, திருப்பதி செயல் இணை அதிகாரி பசந்த்குமார், அந்த மருந்துகளை, பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
நேற்று காலை, ஆயுர்வேத மருத்துவ குழுவினர், திருப்பதியில் உள்ள சீனிவாசம் ஓய்வு விடுதிக்கு சென்று, அங்கு தங்கியுள்ள, உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபடும், 200 ஊழியர்களுக்கு, இந்த மருந்துகள் அடங்கிய கிட்டை அளித்தனர்.அதில், நேசல் டிராப்ஸ், கை கழுவும் லிக்விட், சானிடைசர், வாய் கொப்பளிக்கும் லிக்விட், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மாத்திரைகள் என, ஐந்து பொருட்கள் அடங்கியுள்ளன. தற்போது, அன்னதான கூட ஊழியர்கள், 1,000 பேருக்கு மட்டுமே இந்த மருந்துகள் வழங்கப்பட உள்ளன.
தொடர்ந்து, தேவஸ்தானத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.வதந்தி பரப்புவோர் மீதுசட்டப்படி நடவடிக்கைதிருமலையில் இருந்து, 8 கி.மீ.,யில் உள்ள தர்மகிரி வேதபாடசாலையில் தங்கி, வேதம் பயின்று வரும் ஒரு மாணவர், சில நாட்களாக இருமல், சளி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு வந்தார்.அவரை, திருப்பதியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்து, ரத்தம் மற்றும் சளி மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். சோதனை முடிவுகள் வருவதற்குள், மாணவருக்கு கொரோனா இருப்பதாக, சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்டன. இதனால், வேதபாடசாலையில் பயிலும், 470 மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மனவேதனையில் ஆழ்ந்துள்ளனர். இது, தேவஸ்தான அதிகாரிகளிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தவறான வதந்திகளை பரப்புவோர் மீது, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.