முகமது இக்பாலுக்கு ஏராளமான செல்வம் இருந்தது. பணம் தேடுவதே வாழ்வின் குறிக்கோள் என வாழ்ந்தார். ஒருநாள் தெருவில் போன பிச்சைக்காரனிடம், ‘‘ வீட்டில் பிரியாணி மீந்து விட்டது; வீணாகி விடும். சாப்பிட வா’’ என்றார். பிச்சைக்காரனோ, ‘‘எனக்கு உணவு கிடைத்து விட்டது. சாப்பிட்டு விட்டேன்.’’ என்றான். ‘‘அப்போ அடுத்த வேளைக்கு எடுத்துட்டு போ.’’ என்றார். ‘‘அதற்கு என்ன அவசரம்? பிறகு பார்த்துக் கொள்கிறேன்’’ என்றான். செல்வந்தருக்கு ‘சுளீர்’ என உரைத்தது. இந்த ஏழைக்கு இருக்கும் புத்தி எனக்கு இல்லையே என வருந்தினார். பணியாட்களை அழைத்து, ‘‘இன்று முதல் தினமும் ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க ஏற்பாடு செய்யுங்கள்’’ எனக் கட்டளையிட்டார். வெளியூர் சென்ற செல்வந்தரின் மனைவி வீடு திரும்பினாள். மக்கள் சாப்பிடுவதைக் கண்டு திடுக்கிட்டாள். ‘‘உங்களுக்கு என்ன பைத்தியமா! தானம் என்ற பெயரில் பணத்தை வீணாக்குகிறீர்களே!’’ எனக் கோபித்தாள். ‘‘உலகில் எதுவும் நிரந்தரமில்லை. எவ்வளவு காலம் நாம் உயிரோடு இருக்கப் போகிறோம்? தெரியவில்லை. பணத்தை பெட்டியில் பூட்டி வைப்பதால் யாருக்கு லாபம்? பிறருக்கு கொடுத்து உதவுவதே மேலான மகிழ்ச்சி’’ என்றார். உண்மையை உணர்ந்த மனைவியும் உணவை பரிமாறத் தொடங்கினாள்.