விரக்தியுடன் இருந்தான் இளைஞன் பீட்டர். வழக்கம் போல் அன்று நேர்முகத் தேர்வுக்கு போன இடத்தில் வேலை இல்லை என கைவிரித்து விட்டனர். “ எனக்கு விடிவு காலம் எப்போது? என் குடும்பம் பணக்கஷ்டத்தில் வாடுவது உமக்கு தெரியவில்லையா! என் தந்தை சேமித்த பணம் எல்லாம் கரைகிறதே! உம்மிடம் மன்றாடும் எனக்கு வேலை கிடைக்க அருள் செய்யும்” என ஜெபித்தான். அவன் மீது இரக்கப்பட்ட அண்டை வீட்டுக்காரர் ஜோயல், “தம்பி! பயப்படாதே! ஆண்டவர் உன்னோடு இருக்கிறார். நிச்சயம் உனக்கு வேலை கிடைக்கும்’’ என ஆறுதலாகப் பேசினார். எளிய அந்த மனிதரின் பேச்சு பீட்டருக்கு கோபத்தை வரவழைத்தது. ‘‘அறிவுரை ஒன்றும் தேவையில்லை. எல்லாம் எனக்குத் தெரியும். உங்க வேலையை மட்டும் பாருங்க’’ என அலட்சியப்படுத்தினான். ‘‘தம்பி! இருளில் வானத்தைப் பார். அது கருப்பாக உள்ளது. அந்த கருமை வானத்தில் தான் நிலாவையும், நட்சத்திரங்களையும் ஆண்டவர் பிரகாசிக்க செய்துள்ளார். உருவத்தைக் கண்டு அலட்சியப்படுத்தாதே. உன் தந்தை என் பால்ய நண்பன் என்பதை மறந்து பேசுகிறாயே. கலங்கிய உன் மனம் நிம்மதி பெற துாக்கம் தேவை. இப்போது ஓய்வெடு. நாளை நல்ல பொழுதாக விடியும்” என்றார் ஜோயல். கஷ்ட காலத்தில் நமக்கு ஆறுதல் கூற, நம்மை விட தகுதியில் குறைந்தவர்களும் வரலாம். அவர்களின் வாழ்க்கையும், உருவமும் நம்மை விட மதிப்பு குறைவுடையதாக இருக்கலாம். அவர்களை அலட்சியப்படுத்தக் கூடாது. ஏனெனில் அவர்களிடமும் நல்ல விஷயங்கள் புதைந்திருக்கும்.