ஒரு நாள் மாலை சாலையில் நடந்து சென்றார் முல்லா. குதிரைகளில் வீரர்கள் எதிரே வருவதைக் கண்டார். அவரது கற்பனை வேலைசெய்யத் தொடங்கியது. அவரை அடிமையாகப் பிடிக்கவே வருவதாக எண்ணிக் கொண்டார். வந்த வழியே ஓடிச் சென்று ஓரத்தில் இருந்த சுவரில் ஏறி இடுகாட்டில் குதித்தார். அங்கிருந்த குழியில் கால்நீட்டிப் படுத்துக் கொண்டார். முல்லாவின் புதிரான செயலைக் கண்ட அவர்கள் பரிதாபப்பட்டனர். முல்லாவிடம், “நீங்கள் ஏன் இங்கே படுத்து விட்டீர்கள். எங்களைக் கண்டு பயப்பட வேண்டாம். ஏதாவது உதவி தேவையா?” எனக் கேட்டனர். ‘‘நீங்கள் கேள்வியைக் கேட்க முடிவதாலேயே நேரடியான பதிலை நான் அளிக்க முடியாது. எல்லாம் உங்களின் பார்வையில் உள்ளது. எப்படி கேட்டாலும் இதுதான் பதில். உங்களால் தான் நான் இங்கிருக்கிறேன். என்னால் தான் நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்’’ என மனநிலையை வெளிப்படுத்தினார் முல்லா.