பதிவு செய்த நாள்
26
ஜூலை
2020
11:07
ஆடி சஷ்டி திதியான இன்று (26/07/2020) உலகம் முழுதும் இருந்து, இரண்டு கோடி பேர் பங்கேற்கும் கந்த சஷ்டி கவச மகா பாராயணம் நிகழ்ச்சி, இணையதளம் வாயிலாக நடக்க உள்ளது. சக்தி வாய்ந்த கந்த சஷ்டி கவச மந்திரங்கள், நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தி, பதற்றத்தைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.இன்று சொல்வது இன்னும் அதிக பலன்தரும்.
வாழும் கலை அமைப்பு நிறுவனர், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தலைமை வகிக்கிறார். சமூக ஊடகங்கள் டி.வி.,க்கள் வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. இது, மிக பிரமாண்ட ஆன்மிக ஒருங்கிணைப்பு பிரார்த்தனையாக நிகழவிருக்கிறது. இதில் இணைய விரும்புவோர், பேஸ்புக் லைவ் bit.ly/FBKavacham, யூ டியூப் லைவ் bit.ly/YTKavacham ஆகிய முகவரிகளை டைப் செய்து நுழையலாம்.
உலகெங்கும் உள்ள மதத் தலைவர்கள், ஆன்மிகவாதிகள், தமிழ் சங்கங்கள், முருகர் பக்தி பேரவைகள், காவடிக் குழுக்கள், பாதயாத்திரைக் குழுக்கள், இந்து அமைப்புகள், கிராமப் பூசாரிகள் பேரவை, துறவியர் சங்கம், கோயில்கள், கல்வி நிறுவனங்கள், சிறுதொழில் முனைவோர் சங்கங்கள் இந்த கந்த சஷ்டி கவசம் மகா பாராயணத்தில் பங்கேற்க உள்ளன என்றனர்
இப்படி இரண்டு கோடி பேர் இணைந்து பாராயணம் செய்ய உள்ள கந்த சஷ்டியின் மகிமை பற்றியும் அந்தப்பாடலைப்பாடி அன்றாடம் பலரது உள்ளங்களிலும் இல்லங்களிலும் பரவசம் ஏற்படுத்திவரும் தெய்வீகக்குரல்களுக்கு சொந்க்காரர்களான சூலமங்கலம் சகோதரிகள் பற்றியும் இந்த நேரத்தில் தெரிந்து கொள்வது இன்னும் நல்லது.
18-ம் நுாற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ப்புலவரான தேவராய சுவாமிகள் இயற்றியதுதான் கந்தசஷ்டி கவசம்.நோய்நொடி இல்லாமலும், அழிவு நேராமலும் காக்கவேண்டும் என்று உடலின் ஒவ்வொரு உறுப்பின் பெயராகச் சொல்லி "காக்க" வேண்டி முருகப்பெருமானை வேண்டுவதுதான் பாடலின் கரு.
இந்தப் பாடலின் இசை வடிவம் பலரால் பாடப்பட்டுள்ளது என்றாலும் சூலமங்கலம் சகோதரிகள் பாடியதுதான் பிரபலமாக உள்ளது எங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது . இவர்கள் பாடியதை கேட்கும் போது முருகனின் உருவமும், இனம் புரியாத பரவசமும், மனதில் உற்சாகம், தன்னம்பிக்கை இவையெல்லாம் ஒருங்கே ஏற்படும்.
தமிழ்ப் பெண்களின் பூஜையறையில் இரண்டறக் கலந்துவிட்ட கந்த சஷ்டி கவசத்தை பாடிய இந்த சூலமங்கலம் சகோதரிகள் கர்னாடக இசையில் புகழ்பெற்றுத் திகழ்ந்தவர்கள். ஜெயலட்சுமி-ராஜலட்சுமி சகோதரிகள் இருவரும், தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் சூலமங்கலத்தில் இசைப் பாரம்பர்யம் மிக்க குடும்பத்தில் . இவர்களது சொந்த ஊரிலேயே கே.ஜி.மூர்த்தி, பத்தமடை எஸ்.கிருஷ்ணன், மாயவரம் வேணுகோபலய்யர் ஆகியோரிடம் முறையாக சங்கீதம் பயின்றார்கள். பாட்டும் இசையுமாகவே இவர்களது பால்யம் கழிந்தது. கூடவே, தேசப் பக்தியும் தெய்வ பக்தியும் இணைந்திட, விழாக்களில் இவர்களைப் பாடப் பலரும் அழைத்தனர். கர்னாடக பக்தி இசையில் புகழ்பெறத் தொடங்கியதும், இவர்களை சூலமங்கலம் சகோதரிகள் என்றே மக்கள் அழைத்தனர்.
1961-ம் ஆண்டு அரசிளங்குமரி திரைப்படத்தில் பாடத் தொடங்கினர். சகோதரிகளுக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. ஆனாலும், முழு வேலையாக, திரை வாய்ப்புகளைத் தேடித் தேடியெல்லாம் இவர்கள் பாடியதில்லை. வரும் வாய்ப்புகளைக்கூட தேர்ந்தெடுத்தே ஒப்புக்கொண்டனர். தெய்வம் படத்தில் இடம் பெற்ற வருவான்டி தருவான்டி மலையாண்டி... பழநி மலையாண்டி என்பது போன்ற காலத்தால் அழியாத பல பாடல்களை பாடியுள்ளனர். ஆன்மீக பாடல்களை பாடி ஆல்பமாக வெளியிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டினர் அப்படித்தான் கந்த சஷ்டி கவசத்தை பாடினர் மனமுருகி அவர்கள் தேனினும் இனிய குரலில் பாடிய கவசம்தான் இன்று உலகமெங்கும் ஒங்கி ஒலித்துக்கொண்டு இருக்கிறது.
இசைத் துறையில் இவர்கள் ஆற்றிய சாதனைகளுக்குப் பரிசாக, முருக கானாமிர்தம், குயில் இசைத்திலகம், இசையரசிகள், நாதக்கனல் ஆகியப் பட்டங்கள் இவர்களைத் தேடி வந்தன. 1983-ம் ஆண்டு கலைமாமணி விருதும் தமிழக அரசின் சார்பில் சகோதரிகள் இருவருக்கும் வழங்கப்பட்டது. சூலமங்கலம் சகோதரிகளில் இளையவரான ராஜலட்சுமி 1992-ம் ஆண்டில் மறைந்தார். அவரது அக்கா ஜெயலட்சுமி சென்னை பெசன்ட் நகரில் 85-வது வயதில் காலமானார். சூலமங்கலம் சகோதரிகள் மறைந்தாலும் அவர்கள் பாடிய கந்த சஷ்டி பாடாலானது உலகம் உள்ளவரை அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒலித்துக்கொண்டேயிருக்கும்.இன்று அந்தக்குரலுடன் உங்கள் குரலும் சேர்ந்து ஒலிக்கட்டும்.
-எல்.முருகராஜ்