பதிவு செய்த நாள்
01
ஆக
2020
10:08
ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையான நேற்று, மாநிலம் முழுதும், பல்வேறு வீடுகளில், வரலட்சுமி விரதத்தைப் பெண்கள் ஏராளமானோர் கடைபிடித்தனர். இதனால், கிராமம், நகரம் என அனைத்துப்பகுதிகளிலும், ஆன்மிக மணம் கமழ்ந்தது.நேற்றுமுன்தினம் இரவே,நோன்பு கடைபிடிக்கப்பட்ட வீடுகள் சுத்தம் செய்யப்பட்டன. மாக்கோலமிட்டு, மாவிலைத்தோரணங்கள் கட்டப்பட்டன.
வீட்டின் தென் கிழக்கு மூலையில் சாணம் தெளித்து, கோலமிட்டு, தலைவாழை இலையில், ஒரு படி அரிசியைப் பரப்பி வைத்தனர். பித்தளை அல்லது வெள்ளி செம்பின் உள்ளே அரிசி, மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு,நாணயங்கள், எலுமிச்சை, கருகமணி, வாசனை திரவியங்கள் போன்றவையிடப்பட்டன.இக்கலசத்தின் வாய்ப்பகுதியில் மாவிலை மீது தேங்காய் வைத்தனர். தேங்காயில், மஞ்சள் பூசப்பட்டு, குங்குமிடப்பட்டு, அம்மன் திருமுகம் நோக்கி வைக்கப்பட்டது.இன்று அதிகாலை முதல் பெண்கள் விரதத்தை துவக்கினர். அம்மனுக்கு பல்வகை சாதங்கள், பாயசம், வடை, கொழுக்கட்டை, பசும்பால், தயிர், நெய், தேன் போன்றவை நைவேத்தியம் செய்யப்பட்டன.மஞ்சள் சரடை கும்பத்தில் வைத்து, பூஜை செய்து. பின், கணவரிடம் கொடுத்தோ, மூத்த சுமங்கலி பெண்களைக் கட்டிவிடச் சொல்லியோ, பெண்கள் ஆசிர்வாதம் பெற்றனர். அனைத்து சுமங்கலிப்பெண்களுக்கும், நோன்பு கயிறுகள், புடவை போன்றவற்றை வழங்கினர்.பெண்கள் கூறுகையில், செல்வம், செல்வாக்கு, நீண்ட ஆயுள், பிள்ளைப்பேறு, திருமணப்பேறு, சுமங்கலி வரம் எனப் பல்வேறு நன்மைகளையும், வெற்றிகளையும் வரலட்சுமி நோன்பு அளிக்கிறது. கொரோனா நீங்கி, நாடு செழிக்க வேண்டும் என்று வரலட்சுமியிடம் இந்த முறை வேண்டினோம் என்றனர்.